செவ்வாய், 1 டிசம்பர், 2015

பருவமடைந்த பெண்களுக்குரிய உணவுகள்- நேயன்

ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் உடல் ரீதியாக பலஇழப்புகளை அடைகிறார்கள். மாதாமாதம் உதிரப்போக்கு, பிள்ளைபெறல், பாலூட்டல் போன்றவை. எனவே, பெண் பிள்ளைகள் சத்தான உணவு கொடுத்து வளர்க்கப்பட வேண்டும்.
சத்தான உளுந்தங்களி
தேவை: வெல்லத்தூள் இரண்டு டம்ளர், உளுந்தம் பருப்பு ஒரு டம்ளர், நெய், நல்லெண்ணெய் கால் டம்ளர், ஏலத்தூள் தேவைக்கேற்ப.
செய்முறை: உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும். இறக்கி ஆறிய பின் மிக்சியில் பவுடராக அரைக்கவும். வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதி வந்த பின் ஆறவிட்டு வடிகட்டவும்.
அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த பின், உளுந்து மாவு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கை விடாமல் கிளறவும். பிறகு இதனுடன் வெல்லக்கரைசல், ஏலத்தூள் சேர்த்து மாவு நன்கு வேகும்வரை கிளறி நெய்விட்டு ஒரு சுற்று கலந்து இறக்கி பரிமாறவும்.
மருத்துவப் பலன்: 1. உளுந்தின் புரதம், வெல்லத்தின் இரும்புச் சத்துகள் கிடைக்கும். 2. ஏலத்தூள் சேர்ப்பதால் கபத் தொல்லை வராது. 3. நல்லெண்ணெயில் செய்வதால் எலும்புகள் வலுவடையும். 4. நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்ப்பதால் உடல் சூடு தணியும்.
உளுந்து - தேங்காய் பாயசம்
தேவை: வெல்லம் ஒரு டம்ளர், தோல் நீக்கிய உளுந்து _ தேங்காய்த் துருவல் தலா அரை டம்ளர், ஏலத்தூள் _ நெய் தலா அரை தேக்கரண்டி, முந்திரி _ திராட்சை தலா 5.
செய்முறை: நெய்யை வாணலியில் காயவிட்டு முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுக்கவும். வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, ஒரு கொதி வந்து கரைந்த பின் வடிகட்டவும். உளுந்தை 20 நிமிடம் ஊறவைத்து களைந்து, தேங்காய்த் துருவல் _ ஏலத்தூள் சேர்த்து நைசாக நீர்க்க அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் அரைத்த விழுதைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து, நன்கு வேகும் வரை கை விடாமல் கிளறவும். பிறகு வெல்லக் கரைசல் சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கி, வறுத்து வைத்த முந்திரி _ திராட்சையை மேலே அலங்கரித்து பரிமாறவும்.
மருத்துவப் பயன்: 1. பூப்படைந்த பெண்களுக்கு அந்த நேரத்தில் எலும்புகள் வளர்ச்சி பெறும். இந்த உளுந்து பாயசம் அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கு பெருமளவில் உதவி புரிகிறது. உதிரப் போக்கால் ஏற்படும் சோர்வு. பலவீனத்தை நீக்கி உடலை பலப்படுத்தும். 2. உளுத்துப் போன உடலுக்கு உளுந்து என்பார்கள். 3. வெல்லத்தின் இரும்புச் சத்தும், உளுந்தின் புரதச் சத்தும் கிடைக்கும். வாரம் ஒரு முறை தாராளமாக தரலாம்
வாழை - முருங்கைப்பூ பொரியல்
தேவை: வாழைப் பூ ஒன்று, முருங்கைப் பூ _ முருங்கைக் கீரை தலா ஒரு கைப்பிடி. வேர்க்கடலை கால் டம்ளர். ஒரு பெரிய வெங்காயம். மிளகாய் வற்றல் 4. தேங்காய் துருவல் 5 தேக்கரண்டி. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி. கடுகு உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தாளிக்க எண்ணெய், உப்பு தேவைக்கு.
செய்முறை: வாழைப் பூவின் மேல் மடலை அகற்றிவிட்டு, பூக்களின் நடுவே சிறிய தீக்குச்சி போல இருப்பதை நீக்கி, பொடியாக நறுக்கி தண்ணீரில் போடவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும். முருங்கைக் கீரையை அலசி ஆய்ந்து வைக்கவும். முருங்கைப் பூவையும் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.,
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம்பருப்பு, வெங்காயம் போட்டு தாளித்து... வாழைப்பூ, முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, மஞ்சள் தூள், உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். வேர்க்கடலையுடன், மிளகாய் வற்றல் சேர்த்து மிக்சியில் பொடிக்கவும்.
வாழைப்பூ நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் தேங்காய்த் துருவல், வேர்க்கடலைப் பொடியைக் கலந்து கிளறி சற்று நேரம் கழித்து இறக்கி பரிமாறவும்.
மருத்துவ நன்மை: 1. பூப்பெய்திய பெண்களுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு வாழைப் பூ சிறந்த மருந்தாகும். 2. முருங்கைக் கீரை மற்றும் முருங்கைப் பூவின் இரும்பு சத்தானது அதிக உதிரப் போக்கால் உருவாகும் சோகையைப் போக்கும். 3. தேங்காய் _ வெங்காயம், உடல் சூட்டை தணிக்கும். 4. வேர்க்கடலையின் புரதச் சத்தும் கிடைக்கும்.
-உண்மை,16-30.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக