ஞாயிறு, 29 மே, 2016

இந்தியாவின் சாதனைப் பெண்


வண்ணங்களைக் குழைத்துத் தான் வரைகிற ஓவியங் களையே சமூக மாற்றத்துக்கான கருவியாக மாற்றுகிற உத்தி கைவரப்பெற்றிருக்கிறார் ஸ்வர்ணலதா. அந்தத் திறமைதான் அவர் இந்தியாவின் நூறு பெண் சாதனையாளார்களில் ஒருவராகத் தேர்வுபெறக் காரணமாகவும் அமைந்திருக்கிறது.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த நூறு பெண்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் தேர்வாகியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் ஸ்வர்ணலதா. தென்னிந்திய அளவில் இந்தப் பிரிவில் தேர்வாகியிருக்கும் ஒரே பெண் இவர்தான்.
சிங்கப்பூரில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர் இவர். விவரம் அறியாத வயதிலேயே அப்பா, அம்மா, சகோதரனை ஒரு பெருவிபத்தில் பறிகொடுத்துவிட்டு தன்னந்தனியாக நின்றார். உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்தவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. அதன் பிறகு சென்னை மருமகளாகிவிட்டார். ஏதுமறியாத இளம் பெண் என்பதால் பிறந்த வீட்டிலிருந்தே உதவிக்கு இரண்டு பெண்களை அனுப்பிவைத்தார்களாம்.
பிறந்த வீட்டில் திடீரென பறிகொடுத்துவிட்ட அன்பு அனைத்தும் ஸ்வர்ணலதாவுக்குப் புகுந்த வீட்டில் இரட்டிப்பாகக் கிடைத்தது. அன்பான கணவர், அனுசரணையான மாமியார், மாமனார் என அனைவரின் பாச வளையத்துக்குள் மகிழ்ச்சியாக இருந்தார் ஸ்வர்ணலதா. ஆனால் இவை மட்டுமே வாழ்வின் பூரணமா? இந்தக் கேள்விதான் ஸ்வர்ணலதாவை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றது.
எனக்குச் சின்ன வயசுல இருந்தே படங்கள் வரையறது பிடிக்கும். நான் அப்பா, அம்மாவை இழந்துட்டு நின்னப்போ, பாவம் இந்தப் பொண்ணுன்னு சில உறவுக்காரங்க ஆசையா பணம் கொடுத்துட்டுப் போவாங்க. அந்தப் பணத்துல நான் பெயிண்ட்டும் பிரஷ்ஷும்தான் வாங்குவேன்.
அப்படி ஆரம் பிச்சதுதான் என் ஓவியப் பயணம் என்று சொல்லும் ஸ்வர்ண லதா, திருமணத்துக்குப் பிறகும் ஓவியங்கள் வரை வதைத் தொடர்ந்தார். யாரிடமும் முறையாக ஓவியம் கற்றுக் கொண்ட தில்லை. 1993ஆம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் இவர்கள் சொந்தமாக ஒரு வீடு வாங்க, அந்த வீட்டைத் தன் ஓவியங்களால் அலங்கரிக்க நினைத்தார் ஸ்வர்ணலதா. ரவி வர்மாவின் ஓவியங்கள் மீது ஸ்வர்ணா வுக்கு ஈடுபாடு அதிகம். அதனால் அந்தப் பாணி ஓவியங்கள் வரையத் தீர்மானித்தார்.
பாடம் சொன்ன கண்காட்சி
தன் மனைவியின் திறமைக்கு மேடை அமைத்துத்தர வேண்டியது தன் கடமை என நினைத்தார் வழக்கறிஞராகப் பணி யாற்றும் ஸ்வர்ணலதாவின் கணவர். அவரது முயற்சியால் 1998ஆம் ஆண்டில் தன் முதல் ஓவியக் கண்காட்சியை நடத் தினார் ஸ்வர்ணலதா. கிட்டத்தட்ட அனைத்து ஓவியங்களும் விற்றுவிட, அடுத்த வருடமே இன்னொரு கண்காட்சி லலித் கலா அகாடமியில் நடந்தது.
அங்கேதான் திறமையான பல ஓவியக் கலைஞர்களின் அறிமுகம் ஸ்வர்ணலதாவுக்குக் கிடைத் தது. அப்போதுதான், தான் இதுநாள் வரைந்துகொண்டிருந்தவை ஓவியங்கள் அல்ல. அவை வெறும் அடுத்தவர் பாணியை அப் படியே காப்பியடித்து வரைந்தவை என்பதையும் உணர்ந்து கொண்டார்.
ஒரு முறை ஸ்வர்ணலதாவின் வீட்டுக்கு வந்த அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் இவரது ஓவியங்களைப் பார்த்து வியந்திருக்கிறார். அவற்றைக் கண்காட்சியாக வைக்கலாம் என்று சொன்னதோடு கேரள அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி அதற்கு ஏற்பாடும் செய்துவிட்டார். ஆனால் சென்னையிலிருந்து அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்று மாமனாரும் மாமியாரும் தயங்கியதால் அந்தக் கண்காட்சியில் ஸ்வர்ணலதா பங்கேற்கவில்லை.
ஓவியக் கலைஞர்களுடனான சந்திப்பு, ஓவியங்கள் குறித்த என் பார்வையை மாற்றியது. ஓவியம் என்பது தனித்துவமானது, கற்பனைத்திறனும் புதுமைகளும் நிறைந்தது என்பதும் புரிந்தது. அதற்குப் பிறகு எனக்கென ஒரு ஓவியப் பாணியை உருவாக்கிக்கொண்டேன். சிற்பக்கலை நிபுணர் குதிரை கருப்பையா அவர் களிடம் எடுத்துக்கொண்ட பயிற்சி அதற்குக் கைகொடுத்தது என்கிறார் ஸ்வர்ணலதா.
இதற்கிடையே குழந்தையின்மைக்கான சிகிச்சை, மகப்பேறு, மகனை வளர்த்தல் என்று நாட்கள் காலில் இறக்கையைக் கட்டிக் கொண்டு பறந்தன. ஆனால் கிடைக்கிற சில நிமிடங்களிலும் ஓவியங்கள் வரைந்துவிடுவார் ஸ்வர்ணலதா. இவரது கணவர் பணி நிமித்தம் டில்லியில் இருந்ததால் தன் மகனுடன் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அங்கே சென்றிருந்தார். அப்போது நிர்பயா வழக்கு குறித்த ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் உச்சத்தை அடைந்திருந்தன. அது இவரை வெகுவாகப் பாதித்தது.
நிர்பயாவுக்கு நீதி கேட்டு நின்ற பெண்களின் முகங்கள் அனைத்திலும் நான் நிர்பயாவைப் பார்த்தேன். ஒவ்வொரு பெண்ணும் இந்தச் சமூகத்தால் ஏதோ வொரு வகையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவே தோன்றியது. எல்லா முகங்களிலும் வலியும் வேதனையும் பரவியிருந்தன. அந்த முகங்களை, அவர்கள் குரலில் ஒலித்த கோபத்தை, நிர்பயாவின் வேதனையை ஓவியங்களாக வரைந்தேன் என்று சொல்லும் ஸ்வர்ணலதாவின் ஓவியங்கள் அனைத்திலும் பெண்களே பிரதானமாக இருப்பார்கள். ஒவ்வொரு ஓவியமும் பெண்களின் வலியையும் வலிமையையும் சுமந்தபடி இருப்பதுதான் இவரது தனிச்சிறப்பு.
கடந்த டிசம்பர் மாதம்  மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து என்னுடைய புகைப் படத்தை  அனுப்பச் சொல்லி எனக்கு மெயில் வந்திருந்தது. ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கும் மனநிலையில் நான் அப்போது இல்லை. சில நாட்கள் கழித்து, இந்தியாவின் சிறந்த சாதனைப் பெண்கள் பட்டியலுக்கு நானும் தேர்வாகியிருப்பதாக தகவல் வந்தது.
என் மாமனாரின் இழப்பால் அதைக் கொண்டாடும் மனநிலையில்கூட நாங்கள் இல்லை. ஆனால் பேஸ்புக்கில் பலரும் ஆதரவு தந்து என்னை வெற்றிபெற செய்திருப்பதை அறிந்து மகிழ்ந்தேன் என்றார்.  மேலும் இவர் ஓவியங்கள் மூலம் கிடைத்த வருமானம் அனைத்தையும் ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து உதவி வருகிறார்.
-விடுதலை,9.2.16

வெள்ளி, 27 மே, 2016

பெண்களுக்குச் சொத்துரிமை


04.10.1931, குடிஅரசிலிருந்து...
மைசூர் அரசாங்கத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கச் சட்டம்
1931-அக்டோபர் மாதம் 22ஆம் தேதி நடைபெற விருக்கும் சட்டசபையில் இந்து லா என்னும் இந்துக்கள் சட்ட சம்பந்த மான விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 2 சட்டசபைகளில் மேற்படி விஷயங்கள் சம்பந்தமான பொதுக் கொள்கைகள் யாவும் ஒப்புக்கொள்ளப்பட்டாய் விட் டன. அதின் மீது ஏற்பாடு செய்திருக்கும் திட்டங்கள் வரப் போகும் சட்டசபையின் விவாதத்திற்குக் கொண்டு வரப்படும்.
அவையாவன :-
பெண்களுக்குத் தாங்கள் பெண்களாகப் பிறந்த காரணத்தாலோ, அல்லது அவர்களுக்குச் சொத்துரிமை உண்டு என்பதற்கு மதசம்பந்தமான ஆதாரங்கள் இல்லை என்கின்ற காரணத்தாலோ அவர்களது வாரிசு சொத்துரிமை மறுக்கப்படக்கூடாது. ஒரு பாகம் பிரியாத குடும்பத்தில் உள்ள ஒருவர், தான் சுயார்ஜிதமாக சம்பாதித்து வைத்திருக்கும் சொத்திலும் பெண் சந்ததிகளுக்கு உரிமை உண்டு.
ஒவ்வொரு விதவைக்கும் தானாகவே தத்து எடுத்துக் கொள்ள உரிமையுண்டு. புருஷன் கண்டிப்பாய் தத்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஏற்பாடு செய்திருந்தால் விதவைக்குத் தத்து எடுத்துக் கொள்ள உரிமை இல்லை.
பெண் பிள்ளைகளுக்கு இப்போது கிடைத்துவரும் வாரிசு உரிமை களிலும் கூட சொத்துக்களின் வரும்படிகளை அனுபவிக்க மாத்திரம் உரிமை இருக்கின்றதே தவிர, மற்றபடி அவர்கள் அதை தங்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரமாய் அனுபோகிக்கவும், வினியோகிக்கவும் உரிமை இல்லாமல் இருக்கின்றார்கள்;
ஆதலால் இந்தக்குறையும் நீங்கும்படியாக அதாவது அவர்களுக்குக் கிடைக்கும் வாரிசு உரிமை சொத்துக்களை தங்கள் இஷ்டப்படி சர்வசுதந்திரமாய் அனுபவிக்கவும், வினியோகிக்கவும் இந்தப் புதிய சட்டத்தில் அனுமதிக்கப்படுகின்றது.
பாகம் பிரியாத குடும்பத்தில் கணவன் இறந்துவிட்டால் பெண் ஜாதிக்குக் குழந்தை இருந்தாலும், இல்லாவிட்டாலும் குடும்ப சொத்தில் கணவனுக்குள்ள பாகம் சர்வசுதந்திரமாய் பெண்களுக்குக் கொடுத்து விட வேண்டும். குடும்ப சொத்துக் கள் பல வழிகளில் துர்வினியோகம் செய்யப்பட்டக் காலங் களிலும் அச்சொத்துகளின் மீது பெண்களுக்கு ஜீவனாம் சத்திற்கு உரிமையுண்டு என்பதாகும்.
-விடுதலை,25.3.16

புதன், 11 மே, 2016

கணவனே கண் “கொன்ற’’ தெய்வம்!

கணவனே கண் “கொன்ற’’  தெய்வம்!



இந்திய திருநாட்டில் ஒவ்வொரு அய்ந்து மணித்துளி களிலும்  ஒரு திருமதி தன் கணவனாலோ அல்லது கணவரின் உறவுகளினாலோ வன்கொடுமைக்கு ஆளாக்கப் படுகிறார்.அந்தத் திருமதியோ புகலிடம் இன்றி எல்லாக் கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு கணவன் வீட்டிலேயே வாழும் நிலை.
2013 ஆம் ஆண்டு பி. பி. சி. மேற்கொண்ட களஆய்வுப் பணியின் முடிவுகள் மிகவும் துயரம் தருவன. எடுத்துக்காட் டாக இரண்டு திருமதிகளின் உண்மை நிகழ்வுகளை கேளுங்கள். என் பெயர் அதிதி.(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
என்னுடைய தோழி என்னுடைய வருங்காலக் கணவரை அறிமுகம் செய்து வைத்தார். தேர்வு செய்தவரும் அவரே. அவர் நல்ல அழகு.. பழகும் பண்பு மெச்சத்தக்கது.  வியந்தேன், மகிழ்ந்தேன்.     திருமணம் கோலாகலமாக நடந்தது. உலகின் பல பகுதி களிலிருந்து  உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். சில வாரங்கள் ஓடின!  அதோ என் கணவர் வருகிறார். அறைக்கதவு மூடப்பட்டது.
இசைப் பெட்டியின் ஒலி கூட்டப் படுகிறது. இரைச்சல் அறை முழுவதும்  .அவர் இடுப்பிலிருந்த பெல்ட் அவர் கையில். விதி முறைகள் என்னிடம் சொல்லப்படுகின்றன.  கத்தாதே, இந்த அறையை விட்டு எந்த சத்தமும் வெளியே போகக் கூடாது. மீறினால் இந்த பெல்ட்டுக்கு அதிக வேலை"  அடுத்த அரை மணிநேரம் அந்த பெல்ட்டுக்கு நல்ல வேலை. என் உடலை பதம் பார்த்தது. போதாது என்று அவருடைய கையும் முட்டியும் என்னைத் தாக்கியது.. காது கூசும் அளவுக்கு தகாத வார்த்தைகளால் அர்ச்சனை. அவருடைய கொடுஞ்சினம், அப்பப்பா!
கணவருக்கு   எல்லாப் பணிவிடைகளையும் மிகக் கவன மாக செய்தேன்.அவருடைய குறிக்கோளோ குறைகளைக் காண்பதிலேயே. வன்கொடுமை வளர்ந்ததே அன்றி எள்ளள வும் குறையவில்லை.   அவர் வீட்டிற்குள் நுழையும்போதே 'திக் திக் 'திக் இதயம் பட படக்கும்  இன்று என்ன ஆகுமோ என்ற அச்சம்.
என்னுடைய 19ஆம் வயதிலிருந்தே இந்த சவுக்கு அர்ச்சனை அரங்கேறுகிறது. ஆறு வருடங்களாக தொடர் கிறது.  நரகத்திற்கு போனால் எனக்கு அது சொர்க்கமாக இருக்கும்.
நாடினேன் என் பெற்றோர்களுடைய உதவியை  .உடற் காயத்தைக் காண்பித்தேன்.. ஒரு மகள் தன் தாயிடம் சொல்ல முடியாததைக் கூட விளம்பினேன். தாய் இரக்கப் பட்டாள்., ஊக்கமளிக்கவில்லை.. அந்தத் தாயோ இதெல்லாம் எப்படியம்மா உன்னால் என்னிடம் சொல்ல முடிகிறது ?  கணவனிடமே செல், .உன் மணவாழ்வை நீ தான் சரி செய்ய வேண்டும்., சகித்துக் கொள், பொறுத்துக் கொள் , தாங்கிக் கொள் " தந்தையோ குடிகாரர்,  .தாயைக் கொடுமைப்படுத் துவார்  இதுதான் இந்திய திருமதிகளின்  வாழ்க்கை முறையோ  என்றெண்ணினேன்.   நாளாவட்டத்தில் என் வாழ்க்கை சீர்மை அடையும் என்றெண்ணினேன்.   கானல் நீர்தான். கண்ணிலும் நீரில்லை. ஆண்டு 2012, ஏப்ரல் மாதம், நண்பர்கள் உதவியோடு தப்பினேன்.  புகலிடம் ஒரு அரசு சாரா அமைப்பில் - பணி புரிகிறேன். என் கடந்த கால கொடூர வாழ்க்கையைப் புறந்தள்ளிவிட்டேன்.
இதோ திருமதி சுனிதா (பெயர் மாற்றப் பட்டுள்ளது) அவர் சொல்கிறார். நான் வேலை பார்க்கிறேன், என் சொந்தக்  காலில் நிற்கிறேன் திருமணமான  மூன்றாவது நாளே என் கணவரின்   முழங்கை என்னை பதம் பார்த்தது.  அடியின் வேகத்தில் படுக்கையில் விழுந்தேன். குலுங்கிக் குலுங்கி இரவு முழுவதும் அழுதேன். ஆனால், ஒரு வார்த்தை "வருந் துகிறேன்" என்று, அவர் வாயிலிருந்து உதிரவில்லை.. என்னே ஒரு கொடூர நெஞ்சம்!
நான் வேலை பார்க்கிறேன்.,மணவிலக்கு பெறலாமா, மறுமணம் செய்து கொள்ளலாமா என்றெண்ணினேன். மண விலக்கு பெற்றவரை மறுமணம் செய்தவரை சமூகம் என்ன சொல்லுமோ, பரிகசிக்குமோ என்ற அச்சம்.
கணவரை அறிமுகம் செய்த தோழியிடம் சென்றேன். கையை விரித்தாள், அறிவுரை அள்ளி வீசினாள்." மணமாகி விட்டாலே நீ கணவனிடம் தஞ்சமாகி விடவேண்டும்." நான் கேட்டேன் "அவர் என்னைக் கொன்றுவிட்டால்"
அவள் "அவரை கொலை யாளியாக்கிவிடு, மணவிலக்கை விட மரணமே மேல், நான் உன் னுடைய இடத்திலிருந்தால் மரணத்தை வரவேற்பேன்" என் றாள்.  எதற்கும் எல்லையுண் டல்லவா, நான்கே மாதத்தில் நான் என் பெற்றோரிடம் சரணடைந்தேன்.
அதிதி, சுனிதா போன்ற திருமதிகளுக்கு  இந்திய நாட்டில்  பஞ்சமா, என்ன?
பாலியல் வன்கொடுமைகளை விட திருமதிகளுக்கு இழைக் கப்படும் வன்முறைகள் மிக அதிகம். இந்திய திருநாட்டில் களஆய்வு புள்ளிவிவரங்களை சிறிதே  பார்ப்போம்.
2013 ஆம் ஆண்டில் இந்தியப் பெண்களுக்கெதிரான வன் கொடுமைகள்- பதிவு செய்யப்பட்டவை.

பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் அதிகரித்தே வருகின்றன  இந்திய அரசு 2005 ஆம் ஆண்டில் இயற்றிய சட்டத்தின் காரணமாகவே வன்கொடுமை நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
பெண்கல்வி, வேலைவாய்ப்பு, விழிப்புணர்வு, மனவலிமை போன்றவைகளே குற்றங்களை வெளிக் கொணர்கின்றன, பதிவு செய்யப்படுகின்றன.பெரும் எண்ணிக்கை மறைந்தே கிடக்கின்றன" என்கிறார் வழக்கறிஞர் மோனிகா ஜோஷி...
இந்திய அரசு இயற்றிய 2005ஆம் ஆண்டு சட்டம் உரிமை யியல் சட்டமே தவிர, குற்றவியல் வழக்கின் கீழே வரா.   உயிரற்ற சட்டமாக உள்ளது என்ற கருத்து நிலவுகிறது.
குடும்ப வன்முறை நிகழ்வுகள் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா? உலகெங்கும் நடைபெறுகின்றன, ஆனால் இந்தக் குற்றங்களுக்கெதிரான மயான அமைதி இந்தியாவின் கலாச் சாரத் தனிப்பண்பு.  பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறை ஆணாதிக்க சமூகத்தில் ஊறிப் போன ஒன்று. ஆணுக்குப் பெண் அடிமை .பெண்ணுக்கெதிரான கொடுமை வழமை யானது .பெண்களை உதாசீனம் செய்., பெண்களை அடிப்பதில் தவறில்லை.
மேற்குறிப்பிட்ட கலாச்சார சீர்கேடு இந்திய மக்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. இதனைச்  சீர் செய்ய பெண் கல்வி, மனவலிமை மற்றும்  அரசு இயற்றிய சட்டங்களை நேர்மையாக செயல்படுத்துதல் வழியாகவே இயலும். (பி.பி.சி.யின் ஆய்வுக் கட்டுரையின் தழுவல்)
சி.நடராசன்
-விடுதலை ஞா.ம.31.1.15,ப3