திங்கள், 15 ஆகஸ்ட், 2016

முலை வரிக்கு எதிராய் தன் முலையையே அறுத்து கொடுத்த இளம்பெண்

முன்னோடி வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள், மார்பகத்திற்கு வரியும் அதனை மூடி மறைப்பதற்கு வரியும், விதித்த வரலாற்றை தன்னுடைய கட்டுரையில் விரித்துரைத்துள்ளார்கள்.
அண்மையில் ஓர் அரிய வரலாறு கண்டறியப்பட்டுள்ளது. அது ஆட்சியாளர்கள்  மார்பக வரியை வசூலிப்பதில் காட்டிய வேகத்தையும், ஆதிக்க ஜாதியினரின் இந்த வரியை எதிர்த்த வீராங்கனையின் வரலாறும் ஒன்று போலவே உலகறியச் செய்தது.
இந்த வரலாற்று நிகழ்வு நடந்தது வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் குறிப்பிடும் அதே திருவிதாங்கூர் இராஜ்யம்தான். நடந்த காலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன். இடம் திருவிதாங்கூர் இராஜ்யம், நாங்கிலி கிராமம், சேர்த்தலா வட்டம். இப்போது கேரள மாநிலத்தில் இருக்கின்றது. ‘நாங்கிலி’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள். ‘நாங்கிலி’ என்பது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பெயர்.
இவர் முப்பது வயதை அடைந்த அழகிய மாது. ஒரு கட்டத்தில் இவர் தன்னுடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைச் செலுத்துவதில்லை என உறுதி கொண்டாள். ஆனால், திருவிதாங்கூர் இராஜ்யத்தின் உயர்ஜாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை.
தொடர்ந்து மார்பக வரி வசூலிப்பவர்களை நாங்கிலியின் வீட்டுக்கு அனுப்பி வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், அழகி நாங்கிலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவமானமாகக் கருதினார். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்ற தனது உறுதியில் தளராமலிருந்தாள்.
இந்த மார்பக வரிக்கு மலையாள மொழியில் முலைக்கர்ணம் என்று பெயர்.
தொடர்ந்து வரியைக் கட்டிட அவள் மறுத்து வந்ததால் வரி பாக்கி அதிகரித்துக் கொண்டே சென்றது.
மார்பகம் பெரியதாக இருந்ததால் வரியும் அதற்குத் தகுந்தாற் போல் அதிகமாக இருக்கும். அழகியின் மார்பகங்கள் பெரியவை. அதனால் விதித்த வரியும் அதிகம்.
‘முலைக்கர்ணம் பார்வத்தியார்’ அதாவது மார்பக வரியை வசூல் செய்யும், பார்வத்தியார் ஒரு நாள் நாங்கிலியை தேடிப் போய்விட்டார்.
நாங்கிலி தன் வீட்டுக்கு வந்த அவரை, சற்றுப் பொறுங்கள் இதோ வரித் தொகையோடு வருகின்றேன் என்று வீட்டிற்குள் சென்றாள்.
ஒரு வாழை இலையை எடுத்து விரித்தாள். விளக்கொன்றை ஏற்றி வைத்தாள். தன் மார்பகங்களை ஒவ்வொன்றாக அறுத்து வைத்தாள். அப்படியே சாய்ந்து இறந்தாள்.
மார்பக வரியை வசூலிக்க வந்த பார்வத்தியாருக்கு இந்த மார்பகங்கள் என்று உணர்த்திச் சென்றாள். மார்பக வரிக்கு எதிராகத் திப்பு சுல்தானின் கடும் நடவடிக்கைகளுக்குப் பின், அது சமுதாயத்தில் ஒழிக்கப்பட்டது.
நூறு ஆண்டுகளுக்கு முன் அழகி நாங்கிலி அறுத்து வைத்த மார்பகங்கள் தாம் ‘முலைவரி’ என்ற மார்பக வரிக்கு எதிராக எழுந்த முதல் எதிர்ப்பலை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
இந்த அதிர்வான நிகழ்ச்சிக்குப் பின் அவள் வாழ்ந்த இடம் ‘முலைச்சிபரம்பு’ (மார்பகப் பெண் வாழ்ந்த இடம்) என்றே வழங்கப்பட்டது.
பின்னர் இந்தப் போராட்ட வரலாற்றை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மறைத்திட விரும்பினார்கள் ஆதிக்க ஜாதியினர். அதனால் அந்த இடத்தை ‘முலைச்சிபரம்பு’ என்பதற்குப் பதிலாய் ‘மனோரமா காவலா’ என மாற்றினார்கள்.
ஆனால், அவள் வாழ்ந்த அந்த ஓலைக்குடிசை இடிபாடுகளுடன் அதே இடத்தில் இருக்கின்றது.
முரளி என்ற ஓவியர் இந்த வரலாற்றைச் சித்திரமாகத் தீட்டி அந்த இடத்தில் வைத்திருக்கின்றார்.
அந்த ஊர் மக்கள்  ஒவ்வொருவரும் “நாங்கள் இந்த வரலாற்றை செவி வழி செய்தியாகக் கேட்டு வளர்ந்தோம். இப்போது எங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே சித்திரமாக வரைந்துள்ளார் முரளி’’ என அவரைப் பாராட்டுகின்றார்கள்.
இந்த இடம், இடம்பெறும், சேர்த்தலாதான் முன்னாள் இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அவர்களின் சொந்த ஊர்.
இந்த வரலாறு பேணப்பட வேண்டும், அழகி நாங்கிலிக்கு நினைவிடம் ஒன்றும் எழுப்பப்பட வேண்டும் என்பது அந்த மக்களின் வேண்டுகோள்.
- டைம்ஸ் ஆஃப் இந்தியா, 7.3.2016

--உண்மை,16-31.5.16

மாதாவிடாய் பற்றி அவசியம் அறிய வேண்டியவை!

சினைப்பையில் உருவாகும் கருமுட்டைகள், ஹார்மோன் சுழற்சிக்கு உட்பட்டு, முழு வளர்ச்சியடைந்து, உடைந்து, பின்னர் வரக்கூடிய ஹார்மோன் மாற்றத்தின் முடிவில், கர்ப்பப்பையில் உதிரப்போக்கு ஏற்படுவதை மாதவிடாய் என்கிறோம். சினைப்பையின் செயல்பாட்டை மூளையின் உதவியோடு நாளமில்லாச் சுரப்பிகள் கவனித்துக்கொள்ளும். பொதுவாக, 9 _15 வயதுக்குள் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவார்கள் (முதல் தடவை மாதவிலக்கு ஏற்படுவது). இந்த வயதுக்குக் குறைவான / அதிகமான வயதில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவது இயல்பிற்கு மாறானது. சிலருக்கு நிகழக்கூடியது. அந்தச் சிறுமிகளை மருத்து-வரிடம் அழைத்துச் சென்று, பூப்பெய்துதல் பிரச்சினைக்கான காரணத்தை பரிசோதனை மூலம் கண்டறிந்து, சரிசெய்ய வேண்டியது மிகவும் அவசியம். தவறினால், அந்தச் சிறுமி பெரியவளாகி வளரும்போது குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்படுவதில் தொடங்கி கேன்சர் உள்ளிட்ட பிரச்சினைகள் வரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பூப்படையும் முன்...

பெண் பிள்ளைகள் பூப்படைவதற்கு 3, 4 வருடங்களுக்கு முன்பிருந்தே, உயரம் அதிகரிப்பது, எடை கூடுவது, மார்பகம் வளர்ச்சியடைவது என அதற்கான மாற்றங்கள் அவர்கள் உடலில் வெளிப்பட ஆரம்பிக்கும். அப்போதிருந்தே அவள் அம்மா, அந்தச் சிறுமியை மாதவிடாய் நாட்களுக்குத் தயார்படுத்த வேண்டும். ‘மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படும்’ என்பதை பூப்பெய்வதற்கு முன்கூட்டியேவும், முதல் மாதவிலக்கு நிகழ்ந்த பின்னர் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியும், சோர்வும் இயல்பானவையே என்பதையும், அந்நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள், நாப்கின் பயன்பாடு, எடுத்துக்கொள்ள வேண்டிய சத்துணவின் அவசியம் என... மாதவிடாயை அந்தச் சிறுமி இயல்பானதொரு உடல் மாற்றமாக கடப்பதற்-கான விழிப்பு உணர்வை அளிக்க வேண்டும்.

பாலியல் சம்பந்தமான கேள்விகளை அவர்கள் எழுப்பினால், அவற்றைத் தவிர்க்காமல், ‘அதெல்லாம் பேசக்கூடாது’ என்று அவர்களை அடக்காமல், உரிய பதிலை எளிமையாக அவர்களுக்கு அளிக்க வேண்டும். பள்ளிக்கு முன்பாக, வாழ்க்கைக் கல்வியின் அடிப்படை குழந்தைகளுக்குத் தரப்பட வேண்டிய இடம், வீடுதான்.
சிறுமிகளுக்கு சுழற்சி மாறலாம்...!

சில சிறுமிகளுக்கு பூப்படைந்த முதல் மூன்று வருடங்கள்வரை, மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என மாதவிடாய் சுழற்சி சீரற்று இருக்கலாம். அது இயல்பானதே. காரணம், பருவமடையும்போது அந்தச் சிறுமியின் நாளமில்லாச் சுரப்பிகளின் வளர்ச்சி முழுமையடையாமல் இருக்கலாம். மூன்று வருடங்களுக்குள் வளர்ச்சி முழுமையடைந்து, நாளமில்லாச் சுரப்பிகள் சரியாக வேலை செய்யத் தொடங்கிவிடும், மாதவிலக்கு சுழற்சியும் சீராகிவிடும். ஆனால், பூப்படைந்த மூன்று வருடங்களுக்குப் பிறகும் சுழற்சி சீராகவில்லை எனில், மருத்துவ ஆலோசனை அவசியம்.

மாதவிடாய் சுழற்சி... எது சரி, எது பிழை?

21 _ 35 நாட்களுக்குள் சுழற்சி முறையில் உதிரப்போக்கு ஏற்படலாம். ஆரம்ப கட்டங்களில் ஒவ்வொரு முறையும் 2 _ 8 நாட்கள்வரை உதிரப்போக்கு இருக்கலாம். ஒரு சுழற்சியில் 15 முதல் 80 மில்லி அளவுக்கு உதிரப்-போக்கு வெளிப்படலாம். இவையெல்லாம் வழக்கமான ஒன்று, மாதவிடாய், இயல்பைவிட அதிகளவில் வித்தியாசப்பட்டால், அது இரண்டு மாதங்களுக்குப் பின்னும் இதேபோன்ற சுழற்சியாகவே நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஹார்மோன் ஏற்ற இறக்கம் முதல், சினைப்பையில் நீர்க்கட்டி, அதிக அல்லது குறைந்த எடை, இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்சினை, இன்சுலின் குறைபாடு, மன அழுத்தம், மனச்சோர்வு, ரத்தம் உறைவதில்  ஏற்படும் சிக்கல் வரை இதற்கான காரணங்கள் எதுவாகவும் இருக்கலாம். அதைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். தவறினால், பின்னாளில் அது குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்திவிடலாம்.

அந்த மூன்று நாட்களில்...

மாதவிடாய் நாட்களின் வலியும், உதிரப்போக்கும் இயற்கையானது என்பதால், அச்சம் தேவையில்லை. சிலரால் சாப்பிட முடியாது. சிலருக்கு பசிக்காது. இருந்தாலும், சத்துணவு அவசியம். ஜூஸ் எடுத்துக்கொள்வது நல்லது. இந்நாட்களில் ஓய்வு அவசியம் என்றாலும், ஒரேயடியாக முடங்கி இருக்கத் தேவையில்லை. மாறாக, உடலுக்கு அதிக வேலை கொடுக்காமல் சிறுசிறு வேலைகளை செய்யலாம். சுகாதாரமாக இருப்பதுடன், அரிப்பு, துர்நாற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கெமிக்கல்கள் கொட்டி தயாரிக்கப்படும் நாப்கின்கள் தவிர்த்து, பருத்தியிலான பட்டை (காட்டன் பேடுகள்), பருத்தி உள்ளாடைகள் பயன்படுத்துவது நல்லது. மிக முக்கியமாக, ஒரு பெண் தன் மாதாந்தர சுழற்சி தேதி, அப்போது ஏற்படும் உடல் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து, அதில் மாற்றங்களை உணர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

நடுத்தர வயது முதல் மாதவிடாய் நிற்கும் வரை...!

மாதவிடாய் காரணிகளைப் பொறுத்தவரை, 15_25 வயதுக்குள் படிப்புச்சுமை, வேலை அழுத்தம், திருமணம் என ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம் என்பதால், அதனால் அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மாதவிடாய் சுழற்சியிலும் பிரதிபலிக்கலாம். இந்த வயதுகளில் மாதவிடாய் பிரச்சினை ஏற்பட்டால், மருத்துவரைச் சந்தித்து நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

ஒரு பெண்ணுக்கு முதல் குழந்தை 21_26 வயதுக்குள் பிறக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியமானது. ஒருவேளை தள்ளிப் போடுவதாக இருந்தால், மருத்துவ ஆலோசனை அவசியம். இன்றைய சூழலில் 28, 30 வயதில் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள், அதன் பின்னரும் சில பல காரணங்களுக்காக 3, 4 ஆண்டுகளுக்கு கருத்தரிப்பதைத் தள்ளிப் போடுகிறார்கள். இப்படி அளவுக்கு அதிகமாகக் காலம் தாழ்த்துவதால், பின்னர் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, அதுபோன்ற முடிவில் இருக்கும் பெண்களுக்கும் மருத்துவ ஆலோசனை கட்டாயம் தேவை. அதேபோல, நிரந்தரமாக குழந்தை பெற்றுக்-கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்கள் அதற்கான மருத்துவ ஆலோசனைகள், வழிமுறைகளை மருத்துவமரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

30 _ 40 வயதில் அதிகமான உதிரப்போக்கு இருந்தால், அதற்கு கர்ப்பப்பை கட்டி உள்ளிட்டவை காரணங்களாக இருக்கலாம். மாதவிடாய் இல்லாத சமயத்தில் உதிரப்போக்கு, உடலுறவுக்குப் பின் உதிரப்போக்கு போன்றவை ஏற்பட்டால், அது உள் உறுப்பு பிரச்சினையின் அறிகுறியென உணர்ந்து, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

40 _ 45 வயதை மாதவிடாய் நிற்பதற்கு (மெனோபாஸுக்கு) முந்தைய நிலை எனலாம். இந்தச் சமயத்தில் பெண்களுக்கு கட்டுக்-கடங்காத உதிரப்போக்குடன் அதிக சோர்வு, இடுப்பு வலி, மூட்டு வலி, சர்க்கரை, உடல் பருமன், ரத்த அழுத்தம், இதயப் பிரச்சினை போன்றவை வர வாய்ப்புள்ளது. இதனால் அதிக மன அழுத்தம் உண்டாகும்.

45 வயதுக்கு மேல் ஓராண்டு காலம் தொடர்ந்து உதிரப்போக்கு ஏற்படவில்லை என்றால், அது மாதவிடாய் நின்றதன் அடையாளம். (முழுமையான மெனோபாஸ் ஆகும்.) அதற்குப் பிறகு 52 வயது வரை திடீரென உதிரப்போக்கு ஏற்பட்டால் அதை புற்றுநோய்க்கான அறிகுறி என எடுத்துக்கொண்டு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மொத்தத்தில், ஏன், எதனால், எப்படி என மாதவிடாயின் நிகழ்வுகளை ஒவ்வொரு பெண்ணும் அறிவியல் ரீதியாக அறிந்து வைத்துக்கொள்ள வேண்டியதும், அதில் மாற்றங்கள் ஏற்படும்போது தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியதும் மிக முக்கியம்.

சத்தான உணவு... கட்டாயம் தேவை!

பெண்களின் மாதவிலக்கு உதிரம், கழிவு அல்ல. ஒவ்வொரு மாதமும் அது அவர்களின் உடல் உருவாக்கி வெளியேற்றும் குருதி. ஒவ்வொரு சுழற்சிக்கும் அவர்கள் தங்களின் உடலில் 80 மில்லி வரை உதிரம் இழக்கிறார்கள் எனில், அதை ஈடுகட்டும் அளவுக்கு அவர்கள் சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியம்? குறிப்பாக, கீரை, பச்சைக் காய்கறிகள், பேரீச்சை என இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரும்புச் சத்தை உடல் கிரகிக்க வைட்டமின்_சி அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கு சில வார்த்தைகள்

மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் அவளுக்கு ஏற்படும் மன உளைச்சல், மனக்குழப்பம், அவள் மனதை படாதபாடு படுத்தும், பிரசவ உதிரப்போக்கு அவளுக்கு ஏற்படுத்தும் ரத்தச்சோகை, கவனிக்காமல் விட்டால் உயிரிழப்பு வரை ஏற்படுத்தும், மாதவிடாய் நிற்கப் போகும் நிலையில், ஏற்படும் மிக அதிகமான உதிரப்போக்கு, வாழ்க்கையையே வெறுக்கும் அவளை அல்லல்படுத்தும்.

உதிரப்போக்கு நாட்களில் அவள் படும் துயரங்களைப் புரிந்துகொண்டு, அவள் சுமைகளைக் குறைத்து, அந்நாட்களில் பலம் குறைந்து இருக்கும். அவள் வேலைகளைப் பகிர்ந்து, அவளை ஓய்வாய் மன அமைதியுடன் இருக்கச் செய்ய வேண்டியது ஆண்களின் கட்டாயக் கடமையாகும்.
--உண்மை,1-16.5.16