வெள்ளி, 24 ஜனவரி, 2020

2019 சாதனைப் பெண்கள்

இந்தியாவின் இளவரசி

டில்லியில் 1972 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி ராஜீவ் காந்தி- சோனியா காந்தி இணையரின் மகளாகப் பிறந்த பிரி யங்கா காந்தி, சிறுவயதில் பாட்டி இந்திராவின் அரவணைப்பில் அண்ணன் ராகுலோடு வளர்ந்தார்.  உளவியல் பட்டப் படிப்பை டில்லி பல்கலைக்கழகத்திலும், பவுத்த மதத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.புகைப்படக் கலையிலும் ஆர்வம் கொண்டவர். தொழிலதிபரான ராபர்ட் வதேராவை காதலித்து 1997இல் திருமணம் செய்து கொண்ட, இந்தத் இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  16ஆம் வயதில் தேர்தல் பிரசாரப் பரப்புரை பயணத்தைத் தொடங்கிய பிரியங்கா, அன்றிலிருந்து இன்றுவரை தேர்தல் அரசியலோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

தாய்மைக்கு கிடைத்த வெற்றி

உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட் ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை 11 தங்கப் பதக்கங்களை வென்றிருந்த சாதனையை, 12 பதக்கங்களை வென்று முறியடித்தார் அலிசன் ஃபெலிக்ஸ். இச்சாதனையை இவர் முறியடித்திருந்தாலும், இந்த இடத்துக்கு ஃபெலிக்ஸ் வந்தது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் தனது மகள் கேம்ரினை பெற்றெடுத்த 10ஆவது மாதத்திலேயே இந்த சாத னையை நிகழ்த்தியுள்ளார்.  2020ஆம் ஆண்டு டோக்கி யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அலிசன், ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வென்ற பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரராவார்.

உலகின் சிறந்த வீரர்களை வெல்வேன்

லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொட ரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், உலகின் முன் னணி வீராங்கனையான வீனஸ் ஆட்டத்திற்கு நிகராக ஈடுகொடுத்து விளையாடிய காஃப் 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார். விம்பிள்டன்னில் 5 முறை வாகையர் பட்டம் வென்ற வீனஸை முதன்முதலில் எதிர் கொண்ட காஃப் எந்தவித பயமின்றி புயல்போல் விளையாடி வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

தங்க மங்கை

23ஆவது சர்வதேச ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு, ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவதே லட்சியம்.

மிஸ் இந்தியா

ராஜஸ்தான், ராஜ்ஸமந்த் பகுதியைச் சேர்ந்த 20 வயது சுமன் ராவ் 2019க்கான மிஸ் இந்தியா பட்டத்தைத் தட்டிச் சென்றார். வெற்றியாளர் சுமன் ராவ், கோதுமை நிறம், 5‘8‘‘ உயரம், சிரித்த முகம் என ஒரே நாளில் இந்திய இளைஞர்களின் ஹாட் சாய்ஸ் இந்தக் கண்ணம்மாதான். பிறப்பு ராஜஸ்தான், வளர்ப்பு மும்பை. மகாத்மா கல்வி அமைப்பில் பள்ளிப்படிப்பு, இன்ஸ்டிடியூட் ஆஃப் சாட்டர்ட் அக்கவுன்ட் - டில்லியில் கல்லூரி படிப்பு, பி.காம் மற்றும் சாட்டர்ட் அக்கவுன்ட் முடித்திருக்கும் சுமன் படிப்பிலும் கொஞ்சம் கெட்டி.

அந்த 38 நிமிடங்கள்

சுவிட்சர்லாந்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற உலக பேட்மிண்டன் வாகையர் பட்ட இறுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து. இதன் மூலம், உலக வாகையர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். இறுதி ஆட்டத்தில் பி.வி. சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவிடம் மோதினார். போட்டி தொடங்கிய முதல் 38 நிமிடங்களிலேயே, நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் சிந்து.

பெங்காலுக்கு கிடைத்த நைட்டிங்கேல்

மேற்கு வங்க மாநிலத்தின் நாடியாவில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதற்காக பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை ராணு மோண்டால் என்ற பெண்மணி சிறப்பாக பாடியுள்ளார். அதை ஒருவர் காணொலியாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியதை அடுத்து ஒரே இரவில் வைரலானார். அதன் பின்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்று அவருக்கு மேடை அமைத்து தந்தது. தற்போது தொழில்முறை பாடகியாக பேருரு எடுத்துள்ள அவருக்கு தான் இசையமைக்கும் பாலிவுட் படத்தில் பாடல் பாட வாய்ப்பு தந்துள்ளார் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன்.

நடிகையர் திலகத்திற்காக தேசிய விருது

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்தார் கீர்த்தி சுரேஷ். அந்த படத்தில் சாவித்ரியாகவே மாறிய கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் டில்லியில் நடந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கீர்த்தி சுரே ஷுக்கு விருதை வழங்கி, அவரின் நடிப்பை பாராட்டினார்.

மிஸ் யூனிவர்ஸ் மகுடம் வென்ற

தென் ஆப்ரிக்க அழகி

தென் ஆப்ரிக்க அழகியான, சோசிபினி டன்சி, 2019 ஆம் ஆண்டிற்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றார்.  பெண் களிடையே இயற்கை அழகை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல், பாலியல் குறித்த நிகழ்வுகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார் சோசிபினி. அவரிடம் போட்டியின் நீதிபதிகள், “பெண்களுக்கு முக்கியமாக கற்றுக்கொடுக்க வேண்டிய பண்பு எது?” என்று கேட்டதற்கு, அவர்களுக்குத் தலைமைப் பண்பை கற்றுத்தர வேண்டும் என்று, இவர் கூறிய பதில்தான், இவருக்கு மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை பெற்றுத் தந்தது.

ஆங்கில கால்வாய்

சாரா தாமஸ் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். இவர் இந்தாண்டு ஆங்கில கால்வாயை இடைவேளை இல்லாமல் நான்கு முறை கடந்து சாதனை படைத்துள்ளார். வலுவான அலைகள் காரணமாக 209 கி.மீ தூரத்தை, 54 மணி நேரத்தில் வெறும் நீராகாரம் கொண்டு முடித்துள்ளார் 37 வயது நிரம்பிய சாரா. இதுவரை நான்கு பேர் இந்த கால்வாயை மூன்று முறை கடந்துள்ளனர். அந்த சாதனையை முறியடித்து இருக்கும் சாரா மார்பக புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து ஒரு வருடம் கழித்து இதனை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீறிப் பாய்ந்த தோட்டா

தோட்டாவிற்கு முன் அவரது அழகிய புன்னகையும் சீறிப்பாய... ‘இளவேனில் வாலறிவன்’ என்கிற தமிழ் பெயர் இணையத்தில் வைரலானது. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்றவர், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தைபே நகரில் நடைபெற்ற ஆசிய மூத்தோர் போட்டிகளில் தன் முதல் சர்வதேச தங்கப்பதக் கத்தை வென்றார். 2018ஆம் ஆண்டு, தன் 19ஆவது வயதில் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளார்.

இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்

சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது  மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார்.

இதன் மூலம் பிரபலமான அவர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்டார். செப்டம்பர் மாதம், நியூயார்க்கில் நடந்த அய்.நா. வின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டிற் காக, அட்லான்டிக் கடல்பகுதியில் சுமார் 14 நாட்கள் படகில் பயணித்து சென்ற கிரேட்டா, தனது பயண அனுபவத்தையும், தேசிய அளவிலான அரசியல் தலைவர்களையும் குற்றம் சாட்டி பேசினார்.

வரலாறு படைத்த தங்க எக்ஸ்பிரஸ்

செக்குடியரசில் நடந்த சர்வதேச ஓட்டப்பந்தயத்தில் இந்திய தடகள வீராங்கனை இமா தாஸ் 19 நாட்களில் அடுத்தடுத்து 5 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். பிரதமர், குடியரசுத் தலைவர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் இமா தாஸ்.

- விடுதலை நாளேடு 21.1. 20

திங்கள், 9 டிசம்பர், 2019

இந்திய கடற்படையில் முதல் பெண் விமானி பொறுப்பு ஏற்பு



கொச்சி, டிச.3 இந்திய கடற்படை யில் பயிற்சியை முடித்து விமானி களாக 2 பெண்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளனர்.

பிரதிபா சிங் மற்றும் ஷிவாங்கி சிங் ஆகியோர் சமீபத்தில் விமானி களாக பயிற்சிகளை முடித்து சான்றிதழையும் பெற்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

மேலும், இந்த 2 பெண்களும் விமானிகளாக இணைந்துள்ளது, இந்திய கடற்படைக்கே பெருமையை சேர்த்துள்ளது என்று சச்சின் டெண்டுல்கரும் தனது சுட்டுரையில் பிரதிபா சிங் மற்றும் ஷிவாங்கி சிங் ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஷிவாங்கி நேற்று கேரள மாநிலம் கொச்சி கடற்படையில் தனது பணியை தொடங்கினார்.

இதன் மூலம் இந்திய கடற்படையில் இணைந்த முதல் பெண் விமானி என்ற பெயரையும் அவர் தட்டிச்சென்றார்.

ஷிவாங்கி பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்தவர். நாளை (புதன்கிழமை) இந்தியாவின் கடற்படை தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்திய கடற்படையில் முதல் பெண் விமானியாக ஷிவாங்கி பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு 3 12 19

வியாழன், 28 நவம்பர், 2019

கனடாவில் அமைச்சர் ஆன தமிழ்ப்பெண் அனிதா ஆனந்த்

ஒட்டாவா, நவ. 23- கனடாவில் 338 இடங் களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 21ஆம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக் கும், ஆண்ட்ரூ ஸ்கீர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வின் லிபரல் கட்சி 157 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது.  கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களுடன் எதிர்க்கட்சி தகுதியை பிடித்தது. இந்திய நாடாளுமன்றத்தில் மொத்தம் 13 சீக்கிய எம்.பி.க்கள்தான் இருக்கிறார்கள்.  ஆனால் கனடா நாடா ளுமன்றத்தில் 18 சீக்கிய எம்.பி.க்கள் அலங்கரிக்கிறார்கள்.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் ட்ரூடோ தனது புதிய அமைச் சரவையை நேற்று முன்தினம் அமைத் தார். இந்த அமைச்சரவையில் முதல் முறை எம்.பி.யாகி உள்ள தமிழ்நாட்டின் வேலூர் பகுதியை சேர்ந்த அனிதா ஆனந்த் என்ற பெண் இடம் பெற் றுள்ளார். இவர் அங்குள்ள ஆன்டாரியா மாகாணத்தில், ஓக்வில்லே தொகுதியில் இருந்து கனடா நாடாளுமன்றத்துக்கு லிபரல் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

இவர் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சர் ஆகி இருக்கிறார். கனடாவில் ஒரு தமிழ் பெண் அமைச்சர் ஆகி இருப்பது இதுவே முதல் முறை.

இவரது தந்தை டாக்டர் சுந்தரம் விவேகானந்த் அறுவை சிகிச்சை மருத் துவ நிபுணர் ஆவார். தாயார் டாக்டர் சரோஜ், மயக்க மருத்துவ நிபுணர் ஆவார். கனடாவில் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் கென்ட்வில்லே நகரில் 1967ஆம் ஆண்டு பிறந்த அனிதா ஆனந்த், முதுநிலை சட்டப்படிப்பு படித்து அங் குள்ள டொராண்டோ பல்கலைக்கழ கத்தில் சட்டத்துறை பேராசிரியையாக பணியாற்றியவர் ஆவார். ஜான் என்ற கணவரும், 4 குழந்தைகளும் உள்ளனர்.

அனிதா ஆனந்த் அமைச்சர் ஆகி இருப்பது உலகமெங்கும் வாழும் தமிழ்ப் பெண்களுக்கு உற்சாகத்தை அளித்துள் ளது.  இந்து நாகரிகத்தின் கனடா அருங் காட்சியகத்தின் தலைவர் பதவியையும் அனிதா ஆனந்த் வகித்துள்ளார். பிரத மர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சர வையில் இடம் பெற்றுள்ள 7 புதிய அமைச் சர்களில் அனிதா ஆனந்த் ஒருவர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த மேலும் 3 பேருக்கு ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சர் பதவி அளித்துள்ளார். அவர் கள் 3 பேரும் சீக்கியர்கள் ஆவார்கள். மேலும் அவர்கள் முந்தைய அமைச்சர வையிலும் இடம் பெற்றிருந்தவர்கள். அவர்களில், ஹர்ஜித் சிங் சாஜனுக்கு (வயது 49) ராணுவ அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. இவர் முந்தைய அமைச் சரவையிலும் ராணுவ அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நவ்தீப் பெயின்ஸ் (42), கண்டுபிடிப்பு, அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச் சர் ஆகி இருக்கிறார். பர்தீஷ் சாக்கர்(39), பன்முகம், உள்ளடக்கம், இளைஞர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சரவை குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சுட்டுரையில், “புதிய அமைச்சரவை வலுவான, திறமையான அணி ஆகும். நிறைய பணிகள் காத்திருக் கின்றன. கனடாவை முன்னோக்கி அழைத் துச்செல்வதற்கு நாங்கள் தயாராக இருக் கிறோம்” என குறிப்பிட்டிருக்கிறார்.

- விடுதலை நாளேடு 23 11 19

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

நவீன உலகிலும் அடிப்படை உரிமைக்காக போராடும் பெண்கள்



சவுதி அரேபியா, அரபு தீபகற்பத்தில் எண்ணெய் வளமிக்க நாடு. செல்வச் செழிப்பிற்கு பஞ்சம் இல்லை. ஆனால் இங்கு பெண்களுக்கு சாலைகளில் தனியாக செல்லக்கூட உரிமை இல்லை. அதாவது வயது வந்த பெண் ஒருவர் கடைக் குச்செல்லவேண்டுமென்றால் சகோதரன், கணவன் தந்தை போன்ற ஒரு ஆண் துணையோடு தான் செல்லவேண்டும், இது சமீபத்திய காலம் வரையிலான தடை ஆகும்.  ஆனால் தற்போது மிகவும் பழை மைவாத சிந்தனைகள் உடைய நாடு  என்று கருதப்படும் சவுதி அரேபியாவில்,  பெண் கள் தங்களுக்கான சம உரிமைப் போராட் டத்தில்  கணிசமான வெற்றிகளைப் பெற்று வருகின்றனர். . சமீபத்தில் தான் சவுதியில்  ஒரு ஆண் பாதுகாவலரிடமிருந்து அனுமதி பெறாமல் பெண் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பையும், கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் சூழ்நிலையையும், தாங் களாகவே முன்வந்து கல்யாணத்தையும், மணவிலக்கையும் பதிவு செய்யும் உரிமை யையும், சவுதி பெண்கள் பெற்றுள்ளனர்.

உலகில் கிட்டத்தட்ட எல்லா இடங் களிலும் இயற்கையாகக் கருதப்படும் இந்த நடவடிக்கைகள் இன்று வரை சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கிடைக்காத ஒன்றாகவே இருந்தது. சவுதி அரசு ஆணை களை அதிகாரப் பூர்வமாக வெளியிடும் உம் அல்-குரா என்ற தினசரி நாளிதழில் இந்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி யானது.

சவுதி அரசின் இந்த நடவடிக்கையை மேற்குலக நாடுகளின் பெண் உரிமைப் போராளிகள் ஒரு கண் துடைப்பு என்றே கூறுகின்றனர். அதாவது சவுதி அரசர்  ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் சிக்கி பெரும் நெருக்கடிக்கு ஆளான நிலையில் எழுந்துள்ள மனித உரிமை கேள்விகளில் இருந்து தப்பிப்பதற் காகவும், திசை திருப்புவதற்காகவுமே இதை செய்தார்கள் என்று கூறுகின்றனர். .

சுவாசிக்கும் சுதந்திரம்

புதிய அரசாணையின் கீழ், சவுதி பெண்கள் தங்கள் ஆண் பாதுகாவலர்களிட மிருந்து ஒப்புதல் பெறாமல் வெளிநாடு களுக்குச் செல்ல முடியும். 21 வயதை எட்டியதும் அவர்களால் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த, சீர்திருத் தங்களால் பயணிக்கும் சுதந்திரம்  சவூதியில் ஆணுக்கும், பெண்ணுக்கும்  ஒன்றாக்கப் பட்டுள்ளது.

பெண்கள் இப்போது தங்கள் திருமணம், விவாகரத்து மற்றும் தங்கள் குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்ய முடியும். அத்துடன், தன்னிச்சையாக  குடும்ப ஆவணங்களை யும் பெற முடியும். பெண்கள் கணவருடன் வாழ்கிறோம் என்று பதிவு செய்யும் வாய்ப் பும் தற்போது கிடைத்திருப்பதால், இது சவுதி தேசிய அடையாள அட்டைகளை அவர்கள் பெறுவதை எளிதாக்கும்.

இதுவரை, சவுதியில் ஒரு ஆண் மட் டுமே  குழந்தையின்  சட்டப்பூர்வ பாதுகாவ லராக இருக்க முடியும். ஆனால், இந்த விதிமுறையை மாற்றி இனி  பெண்களும் தங்கள் குழந்தைகளின் சட்டப்பூர்வ பாது காவலராக முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளது சவுதி அரசு.

வேலை வாய்ப்புகள்

சவுதியில் இனி  பாலினம், அங்க குறை பாடு அல்லது வயது அடிப்படையில் வேலை வாய்ப்புகளை மறுக்கக் கூடாது என்ற முக்கிய கட்டளைகளையும் புதிய அரசாணை உள்ளடக்கி உள்ளது.

சமீபகாலமாகவே, சவுதி அரேபியாவில் பெண்கள் வேலைக்கு செல்வதற்காக பல முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள். எடுத் துக்காட்டாக வேலைக்கு செல்லும் பெண் களுக்கு ஆடைக்கட்டுப்பாடு தளர்த்தப்பட் டுள்ளது, அதாவது உடல் முழுவதையும் மூடும் ஆடையை வேலைக்குச்செல்லும் பெண்கள் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது., இது  பெண்கள் மட்டும் வேலைசெய்யும் நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளதால் அதிக அளவு பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறி வேலைக்குச் செல்ல விண்ணப்பித்து வருகின்றனர்.

இதன் காரணமாக இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களான டி.சி.எஸ். (2013) மற்றும் விப்ரோ (2017) முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் வணிக செயல்முறை சேவை  மய்யங்களை சவுதியில் திறந்தன.

விரிவாக்கப்படும் பெண் விடுதலை

2012 இல், சவுதி அரேபியா முதல் முறை யாக லண்டனில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கு இரண்டு பெண் பங்கேற்பாளர்களை அனுப்பி வைத்தது.

2015இல்  நகராட்சி தேர்தலில்  பெண்கள் போட்டியிட்டனர். ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஆண் கவுன்சிலர்களை எதிர்த்து 20 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டி ருந்தாலும், சவுதி அரேபியாவின் மேலா திக்க  அரசியலில்  அவர்களின் தோற்றம் ஒரு திருப்புமுனையாகவே  காணப்பட்டது.

2016ஆம் ஆண்டு, 22% ஆக இருந்த வேலைக்குச் செல்லும் சவுதி பெண்களின் எண்ணிக்கையை  2030-க்குள் 30% ஆக உயர்த்துவோம்  என்று  அதிகாரப்பூர்வமாக சவுதி பெண்கள் நலத்துறை அறிவித்தது.

சவுதி நாட்டில் பெண்களுக்கான வாகன ஓட்டுநர் தடை  2018 இல் அகற்றப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே ஆண்டு செப்டம்பரில், ஒரு பெண் தொகுப்பாளர் முதல் முறையாக  தொலைக் காட்சியில் செய்தி ஒளிபரப்பை வழங் கினார்.

2019ஆம் ஆண்டு பிப்ரவரியில், அமெரிக்காவுக்கான தூதர்  பதவியை  ஒரு பெண்ணுக்கு  அளித்தது அந்நாட்டு அரசு.

சவூதி அரேபியாவின் சக்திவாய்ந்த பழைமைவாத குழுக்கள் அரசு பெண் களுக்கு சுதந்திரம் கொடுப்பதை கடுமை யாக எதிர்க்கிறார்கள். இந்த அரசாணையில்  சொல்லப்பட்டுள்ள சீர்த்திருத்தங்களைத் தாண்டி   இன்னும்  பெண் சுதந்திரத்தை  தடுக்கும்  பல விதிகள் நடைமுறையில் தான் உள்ளன. உதாரணமாக, திருமணம் செய்ய , சிறையை விட்டு வெளியேற மற்றும்  ஒரு தொழிலைத் தொடங்க ஆண் பாதுகாவ லரின் அனுமதி இன்னும்  தேவைப்படுகிறது . சவுதி பெண்கள் இன்றும் தங்கள் விருப்பப்படி தங்களின் குழந்தைகளுக்கு வேறு நாட்டுக் குடியுரிமை கோர முடியாது.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான சீர்திருத்தம் என்பது சாதாரணமாக வந்து விடவில்லை. ஆணாதிக்கமும் பழைமை வாதமும் ஊறிப்போன ஒரு அரசரின் தலைமையின் கீழ் உள்ள சவுதி அரேபியா வில் சீர்திருத்தங்களுக்காக போராடி வந்த பெண்ணுரிமையாளர்கள் மீது அந்த நாட்டு அரசே கட்டவிழ்த்து விட்ட வன்முறையை  இன்றும் சவுதி அரேபியப் பெண்கள் மறந்து விடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொடூர சர்வாதிகாரிகள் என்று மேலை நாடுகளால் பக்கம் பக்கமாக எழுதி விமர் சனம் செய்யப்பட்டு அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட ஈராக் அதிபர் சதாம் உசைன், லிபிய அதிபர் முகமது கடாபி போன்றோர் கூட தங்களின் ஆட்சிக்காலத் தில் தங்களின் நாட்டில் பெண்களுக்கு சுதந்திரமான சூழலை உருவாக்கித் தந் தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- ச.ரா.

 - விடுதலை ஞாயிறு மலர், 24.8 .19

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

ஆண்களின் ஒப்புதலின்றி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் சவுதி அரேபிய அரசாங்கம் அனுமதி



ரியாத், ஆக. 2, சவுதி அரேபியா வில் உள்ள பெண்கள் வெளி நாடுகளுக்கு பயணம் செய்ய தங்கள் கணவர், தந்தை அல் லது வேறு ஆண் உறவினர் களிடம் அனுமதி பெற வேண் டும் என்ற விதிமுறை இருந்து வந்தது. சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது அந்த விதியை சவுதி அரேபிய அர சாங்கம் நீக்கியுள்ளது.

21 வயதைக் கடந்த பெண் கள் அனைவரும் விண்ணப் பம் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தங்கள் குடும்பத்து ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம்செய்யலாம் எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்தியர் கைது


இசுலாபாத், ஆக. 2- பாகிஸ்தா னின் தேரா காஜி கான் நகரில் இந்திய உளவாளி ஒருவரைக் கைது செய்துள்ளதாக அந் நாட்டின் பஞ்சாப் மாகாண காவல்துறையினர் தெரிவித்த னர்.

இது தொடர்பாக பாகிஸ் தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்ட தாவது:

ராஜு லக்ஷ்மண் என்ற அந்த இந்தியர் லாகூரில் இருந்து 400 கி.மீ. தூரத்தில் உள்ள தேரா காஜி கான் நகரில் கைது செய்யப்பட்ட தாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர், தாம் ஓர் உளவாளி என்று ஒப்புக் கொண்டதாகவும் அவர்கள் கூறினர்.

பலூசிஸ்தான் மாகாணத் தில் இருந்து தேரா காஜி கான் நகருக்குள் நுழைந்த போது அவர் கைது செய்யப் பட்டதாகவும், மேல் விசார ணைக்காக அவர் ஓரிடத் துக்கு கொண்டு செல்லப்பட் டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் உளவு பார்த் தல் என்பது மரண தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும்.

ஏற்கெனவே இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரியான குல்பூஷண் ஜாதவும் இதே பலூசிஸ்தான் மாகாணத்தில்தான் கைது செய்யப்பட்டார். ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன் றம், உளவு பார்த்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டு களின் கீழ் கடந்த 2017-இல் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து இந்தியா பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கை விசாரித்த பன்னாட்டு நீதிமன்றம், ஜாத வுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்து மறுபரி சீலனை செய்யுமாறு பாகிஸ் தானுக்கு கடந்த மாதம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 2.8.19

செவ்வாய், 11 ஜூன், 2019

மகளிருக்கு மட்டும்.... டாக்சி!



பயணங்கள் பெண்களுக்குப் பாதுகாப் பானவையா என்ற கேள்விக்கு, ‘ஆம்’ என்ற பதிலைச் சொல்லும் பெண்களின் சதவீதம் மிகக் குறைவு. பொதுப் போக்கு வரத்தோ தனியார் நிறுவனங்களின் போக்குவரத்து சேவையோ எதுவாக இருந்தாலும் பெண்கள் பாதுகாப்பு உணர்வுடனும் ஆசுவாசத்துடனும் பயணம் செய்ய முடிவதில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் மகளிர் மட்டும் பேருந்துகளும் ரயிலில் மகளிர் மட்டும் பெட்டிகளும் பெண்களுக்கு ஓரளவு கைகொடுக்கின்றன.

பயணங்களில் தொந்தரவு இருக்கிறது என்பதற்காகப் பெண்கள் வீட்டுக்குள் ளேயே முடங்கிக் கிடக்க முடியாது. படிக்கவோ வேலை நிமித்தமாகவோ அவர்கள் பயணப்பட வேண்டியிருக்கிறது. இரு சக்கர வாகனப் பயணம், குடும்ப உறுப்பினருடனான பயணம் போன்றவை எல்லாப் பெண்களுக்கும் வாய்ப்பதில்லை. இப்படியான சூழலில் வேலைக்குச் செல்லும் பெண்களின் தேவையை உணர்ந்து மகளிர் மட்டும் டாக்சி சேவைகளைச் சில நிறுவனங்கள் அறிமுகப் படுத்திவருகின்றன. கோ வையில் ‘ரெட் டாக்சி’ நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிங்க் டாக்ஸி’ சேவையும் அப்படியொரு நோக்கம் கொண்டதுதான். பெண்கள் இயக்கும் இந்த டாக்சியில் ஆண்கள் பயணிக்க அனுமதி இல்லை. பெண்களும் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும் காலை 6 மணி முதல் இரவு 10.30 மணிவரை பயணிக்கலாம். இரண்டு மாத சோதனை ஓட்டத்துக்குப் பெண்களிடையே கிடைத்த வரவேற்பையடுத்து  ஜூன் 6 முதல் கோவையில் முழுமையாக இந்த சேவையை  ‘ரெட் டாக்சி’ நிறுவனத்தினர் அறிமுகப்படுத்தவிருக்கின்றனர்.

தற்போது ஏழு ‘பிங்க் டாக்சி’கள் கோவை மாநகரில் இயங்கிவருகின்றன. இதற்கென ஏழு பெண் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக் காகச் செயல்படுத்தப்படும் இந்த முயற் சிக்கு ஆரம்பம் முதலே நல்ல வரவேற்பு கிடைத்துவருவதாக ரெட் டாக்சி நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். அதற் குக் காரணம் ஓட்டுநர்கள்.

பயணிகளின்


மன நிறைவு


மூத்த ஓட்டுநரான சிவராணிக்கு 47 வயது. துடிப்புடன் பேசுகிறார். “நாங்க டாக்சியை ஓட்டிட்டுப் போவதை பாத்துப் பலரும் ஆச்சரியப்படுவார்கள்.  பயணம் செய்யும் பெண்கள் குடும்ப உறவுபோல எங்களிடம்  பேசிக் கொண்டு வருவார்கள். சில நேரம் அவர்களுடைய பிரச்சினைகளைக்கூட சொல்லிப் புலம்பு வார்கள். எங்களுடன் செல்பி எடுத்துக் கொள்வார்கள். பேருந்து நெரிசலில்  ஆண்களோட பயணம் செய்வதை விட இப்படி என்னை மாதிரி பெண் ஓட்டுநர் ஓட்டுகின்ற கால் டாக்சியில் செல்வது அவர்களுக்குப் பிடித்திருக்கிறது" என்கிறார் சிவராணி.

சக டாக்சி ஓட்டுநர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் எனக் கேட்ட தற்கு, “நெரிசல் அதிகமாக இருக்கும் இடத்தில் எங்களைப் பார்க்கும் டாக்சி ஓட்டுநர்களும் ஆட்டோ  ஓட்டுநர்களும், ‘அக்கா நீங்கள் முதலில் போங்கள் என்று வழிவிடுகிறார்கள். தெரியாத இடங் களுக்கு வழி கேட்கும் போது, ‘நீங்கள் எங்க தொழிலுக்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சி. எந்த உதவி வேணும்னாலும் கூப்பிடுங்கள்’ என்று சொல்லி ரொம்ப ஆதரவாக  இருக்கிறார்கள். சாஃப்ட்வேர் கம்பெனிகளில்  வேலை செய்யும் பெண் கள், ரயில் நிலையம், விமான நிலையத்திலிருந்து தனியாக வருகின்ற பெண்கள், ‘நாங்கள் இப்போது எந்தச் சிரமமும் இல்லாம நிம்மதியாக வீட்டுக்குப் போ கிறோம்’ என்று எங்களிடம் சொல்லுவது மனசுக்கு நிறைவாக இருக்கு” என்றார் உற்சாகத்துடன்.

முன் இருக்கைச் சுதந்திரம்


தனது சொந்த மாருதி ஆம்னி வாகனத்தில் 2013 முதல் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுவந்த துடியலூரைச் சேர்ந்த நித்ய புவனேஸ்வரி (37) கடந்த ஒரு மாதமாக ‘பிங்க் டாக்சி’யை இயக்கி வருகிறார். “ஆண் கள் ஓட்டுநராக  இருக்கின்ற  டாக்சியில் சில பொண்ணுங்க முன்பக்க இருக்கையில் உட்காரத் தயங்கு வார்கள். ஆனா, இப் போது எங்களுடன் முன்பக்க இருக்கையில் உட்கார்ந்து பெண்கள் மனம் விட்டுப் பேசி கொண்டு வரு கிறார்கள்” என்கிறார் அவர்.

பாதுகாப்பு அம்சம்


‘பிங்க் டாக்சி’ பயணத்தின்போது எங்கேனும் பிரச்சினை ஏற்பட்டால் உதவிக்கு அழைக்க ‘பேனிக் பட்டன்’ வசதியை ஏற்படுத்தி உள்ளனர். அந்த பட்டனை அழுத்தியவுடன் டாக்சி நிறுவனத்தின் கால் சென்டருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிடும். உடனே ஜிபிஎஸ் வசதியுடன் கார் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, அருகிலுள்ள டாக்சி ஓட்டு நரையும் மெக்கானிக்கையும் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘பிங்க் டாக்சி’ நிறுவனர்களில் ஒருவரான தீபக் கூறும்போது, “பெண் ஓட்டுநர்கள் தேவை என வாட்ஸ் அப், ஃபேஸ்புக், நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தோம். ஆனால், டாக்சி ஓட்டு நராக வர பலருக்கும் முதலில் தயக்கம் இருந்தது. அவர்களுக்கு நம்பிக்கை அளித்து, பாது காப்பு அம்சங்களை விளக் கிய பிறகு விருப் பத்தோடு ஏற்றுக் கொண்டனர். பெண் களின் பாதுகாப்பு கருதியும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கிலும்தான் பெண்களுக் கான இந்த  டாக்சி சேவையைத் தொடங்க விருக்கிறோம். பெண் ஓட்டுநர் களுக்கு எந்த நேரக் கட்டுப்பாடும் விதிக் கப்பட வில்லை. அவர்கள் விருப்பப்படி எந்த எட்டு மணி நேரம் வேண்டுமானாலும் பணிபுரியலாம். எங்களின் சேவையைப் பயன்படுத்திய பல வாடிக்கையாளர்கள், ‘அதே ஓட்டுநரையே மீண்டும் அனுப் புங்கள்’ எனக் கேட்கும் அளவுக்கு நம்பிக் கையைப் பெற்றுவரு கிறோம்” என்றார்.

- விடுதலை நாளேடு,11.6.2010 9

புதன், 29 மே, 2019

திருநங்கை திருமணம் பதிவு தமிழகத்தில் முதல்முறை



தூத்துக்குடி, மே 22- -தூத்துக்குடியில் சிவன் கோயிலில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற திருநங்கையின் திருமணம் உயர்நீதிமன்ற மதுரைகிளையின் உத்தரவால் பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்த அருண்குமாரும் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த சிறீஜா என்ற திருநங்கை யும் ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் அருண்குமாரும், சிறீஜாவும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2018ஆம் வருடம் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தூத்துக்குடி சிவன்கோவிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கோவில் அலுவலகத்தில் 600 ரூபாய் முன்பணம்செலுத்தி அருண்குமார், சிறீஜா பெயர் பதிவு செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திருமணம் செய்வதற்காக அருண்குமாரும், சிறீஜாவும் உறவினர்களுடன் கோவிலுக்கு வந்தனர். இவர்க ளுக்கு அங்கு திருமணம் நடைபெற்ற நிலையில் அந்த திரு மணத்தை பதிவுசெய்ய முடியாது என கோவில் நிர்வாகம் மறுத்ததால்தம்பதியினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குரைஞர் சந்திரசேகரன் மூலம் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதி சுவாமிநாதன் திருநங்கை திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில்தூத்துக்குடி பதிவாளர் அலுவலகத்தில் திருமண பதிவாளர் ஜெயகாந்தன், அருண்குமார் சிறீஜா திருமணத்தை பதிவு செய்தார். நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு நீதி மன்ற உத்தரவின் பேரில் தங்கள் திருமணம் பதிவு செய்யப் பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், தான் அரசு வேலைக்கு செல்வேன் என்றும், எனது கணவருக்கு குழந்தை பெற்று தருவேன் என்றும் சிறீஜா தெரிவித்தார். தமிழகத்தி லேயே திருநங்கை திருமணம் சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப் பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு 22. 5 .2019