வெள்ளி, 4 ஜனவரி, 2019

சனாதனத்தின்மீது விழுந்த சவுக்கடி!

அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய


50 லட்சம் பெண்கள் மனித சுவர்




திருவனந்தபுரம், ஜன. 2 கேரளத்தை பின்னோக்கி இழுக்க முயலும் மதவாத, ஜாதிய சக்திகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில்,  620 கிலோ மீட்டர் தூரத்திற்கு 50 லட்சம் பெண்கள் மதில் (மலையாளத்தில் வனிதா மதில்) அமைத்து புத்தாண்டின் முதல் நாளில் வரலாறு படைத்துள்ளனர்.

கேரளாவை ஊடுருவிச் செல்லும் கன்னியாகுமரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாயன்று அணி திரண்ட பெண்கள் கேரளத்தின் மறுமலர்ச்சிப் பாரம்பரியத்தை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர். ஏற்கெனவே திட்டமிட்டிருந்த படி ஒற்றை வரிசையிலும், பல வரிசையிலுமாக பெண்கள் தோளோடு தோள் சேர்த்து பெண்சுவரை பெரும் மதிலாக மாற்றினர். செவ்வாய் மாலை 3.45 மணிக்கு குறிப்பிட்ட இடங்களில் பெண்கள் அணி அணியாக வந்து ஒருவர் தொட்டு ஒருவராக இடைவெளி இல்லாமல் நிரம்பி நின்றனர். சரியாக 4 மணிக்கு கைகளை முன்னோக்கி நீட்டி பெண்களின் சமவாய்ப்பு, மறுமலர்ச்சிப் பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்த உறுதிமொழியை அனைவரும் உரக்க ஒலித்தனர்.

4.15 வரை சுவரும், உறுதிமொழி ஏற்பும் நடந்தது. திருவனந்தபுரம் வெள்ளியம்பலத்தில் உள்ள  அய்யன் காளி சிலைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மாலை அணிவித்து பெண்கள் மதிலுக்கு துவக்கம் குறித்தார். அதைத்தொடர்ந்து சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத், தேசிய மாதர் சம்மேளன தலைவர் ஆனிராஜா மற்றும் மகளிர் அமைப்பினர் அய்யன்காளி சிலைக்கு மரியாதை செலுத்தினர். காசர்கோடில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா பெண் சுவரின் முதல் நபராகவும், திருவனந்தபுரத்தில் பிருந்தாகாரத் கடைசி நபராகவும் தோள் சேர்த்தனர். கொச்சியில் சுவாமி அக்னிவேஷ் பார்வையாள ராக பங்கேற்று வாழ்த்து தெரி வித்தார். திருவனந்தபுரத்தில் பெண் சுவர் நிறைவு பெற்றதும் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிருந்தா காரத், ஆனிராஜா உள்ளிட்ட மகளிர் அமைப்புகளின் தலை வர்கள் பேசினர். இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், சிபிஎம் முதுபெரும் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன், மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். பெண்களின் வலிமையை உலகுக்கு உணர்த்திய உன்னத நிகழ்வாக மகளிர் மதில் அமைந்தது. இந்த பிரம்மாண்ட மதிலின் பகுதியாக பல்வேறு இடங்களில் முஸ்லிம், கிறிஸ்தவ பெண்கள் இடம்பெற்றிருந்தனர். திரைக் கலைஞர் ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களும், எழுத்தாளர்களும் இணைந்து நின்றனர். பெண்சுவரை வாழ்த்தும் விதமாக அனைத்து இடங்களிலும் ஆண்கள் பெருஞ்சுவர் போல் சாலையின் மறுபக்கத்தில் நின்றனர்.

உடைந்தது ஆகமத்தடை:


அய்யப்பனை இரு பெண்கள் நேரில் தரிசித்தனர்




கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப் புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்களும் சபரிமலைக்குச் சென்று அய்யப்பனைத் தரிசித்துவிட்டு வந்துள்ளனர். இதன்மூலம் சனாதனம், ஆகம வேலிகள் முறியடிக்கப்பட்டன.

இந்த நிலையில், அந்த இரு பெண்களும் தரிசித்துவிட்டு வந்த பின்னர் கோவில், கருவறை சுத்திகரிக்கப்பட்டதாம்.

அப்படி செய்வது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதே! சம்பந்தப்பட்டவர்கள்மீது நீதி மன்ற அவமதிப்புத் தொடரப்படுமா?

எங்கே பார்ப்போம்!

- விடுதலை நாளேடு, 2.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக