செவ்வாய், 13 நவம்பர், 2018

முதல் மகளிர் கபடி உலகக் கோப்பையை பெற்று தந்த பெண்



பெருநகரங்களில் குவிந்து கிடக்கும் வசதி, வாய்ப்பைப் பயன்படுத்தி விளை யாட்டு வீராங்கனைகளாவோர் ஒரு ரகம். வசதி வாய்ப்பு எதுவுமே இல்லாத கிராமப்புறங்களில் பிறந்து தன்னம்பிக்கையால் வீராங்கனைகளாவோர் இரண்டாவது ரகம். இந்திய மகளிர் கபடி அணியின் கேப்டன் மமதா பூஜாரி இதில் இரண்டாவது ரகம். பல்வேறு சவால்களையும் இடையூறுகளையும் சந்தித்து, பின்னர் கபடி விளையாட்டில் கில்லியானவர் இவர். முதல் மகளிர் கபடி உலகக் கோப்பையை இந்தி யாவுக்குப் பெற்றுதந்த கபடி ராணியும் இவரே!

கருநாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஹெர்மண்டே என்னும் ஊரில் மமதா பிறந்தார். பள்ளியில் படித்த காலத்திலேயே எல்லா விளையாட்டுகளும் மமதாவுக்கு அத்துப்படி. கோகோ, கைப்பந்தாட்டம், தடகளம் போன்றவை அவருக்குப் பிடித்தமானவை. 1990-களில் கபடி அணி இந்தியாவில் கால் பதிக்கத் தொடங்கியது. பெண்கள் பள்ளிகள், கல்லூரிகளில் அந்தக் காலகட்டத்தில்தான் கபடி அணிகள் உயிர்பெற்றன. மமதா 12ஆம் வகுப்பு படித்தபோதுதான் கபடி விளையாட்டு அவருக்கு அறிமுகமானது.

மமதா கபடி விளையாடத் தொடங்கிய காலத்தில் களிமண் தரையில்தான் பயிற்சி மேற்கொண்டார். விளையாடிவிட்டு வீடு திரும் பும்போது உடை முழுவதும் அழுக் காகிவிடும். கை, கால்களில் சிராய்ப்புகள் இருக்கும். இந்தக் காயங்கள் மமதாவின் திருமணத்துக்குத் தடையாக வந்துவிடுமோ என்று அவருடைய பெற்றோர் அச்சப்பட்டார்கள்.

வீட்டில் மூத்த பெண்ணான மமதாவுக்கு இரண்டு சகோதரிகள் என்பதால், அவரது விளையாட்டு ஆர்வம் பெற்றோருக்குச் சற்றுக் கவலையளித்தது. ஒரு கட்டத்தில் கபடி விளையாட மமதாவை அவர்கள் அனுமதிக்க மறுத்தார்கள். ஆனால், மமதாவின் பயிற்சியாளர் அதற்குச் சம்மதிக்கவில்லை. மமதாவின் பெற்றோரைச் சமாதானப்படுத்தி அவரை விளையாடவைத்தார்.

நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்ட மமதா, அடுத்த மூன்று ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் பங் கேற்று உச்சம் தொட்டதன் பின்னணிக் காரணம்  அவரது உழைப்பு மட்டுமே. அந்தக் காலகட்டத்தில் தேசியக் கபடி அணியில் முதன்மை வீராங்கனையாக அவர் உருவெடுத்திருந்தார். ஹரியாணா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்து வந்த வீராங்கனைகளைவிட இந்தியக் கபடியில் மமதா ஆதிக்கம் செலுத்தினார்.

விளையாட்டில் ஆதிக்கம்

2006இல் கிராமத்தில் இருந்த அனைவரும் மமதாவை வரவேற்கப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்கள். இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்துடன் திரும்பிய மமதாவை ஊரே திரண்டு வந்து வரவேற்றது. தொடக்கத்தில் மமதா கபடி விளையாடுவதைப் புறம்பேசிய ஊர்க்காரர்கள், அந்த வெற்றிக்குப் பிறகு மமதாவைப் புகழ்ந்தார்கள்.

கபடி விளையாட  எக்காரணம் கொண்டும் தடை போட்டுவிடாதீர்கள் என்று மமதாவின் பெற்றோரிடம் அன்புக் கோரிக்கை வைத்தார்கள். அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் மமதாவை நினைத்துப் பெருமையடைந்தார்கள்.

முத்திரை வெற்றி

இது மமதா பங்கேற்ற முதல் சர்வதேசத் தொடர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய மகளிர் அணியின் கேப்டனாகும் அளவுக்கு மமதா உயர்ந்தார்.  கர்நாடக மாநிலத்தின் முதன்மை விளையாட்டு வீராங்கனையாகவும் ஆனார். 2008ஆம் ஆண்டில் மகளிர் கபடி அணியின் கேப்டனாக மமதா உயர்ந்தார். 2010ஆம் ஆண்டில் சீனாவின் குவாங்ஸு நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இவரது தலைமையில்தான் இந்திய அணி சென்றது. தங்கப் பதக்கத்துடன் இந்திய அணி நாடு திரும்பியது.

ஒரு வீட்டில் ஒரு பெண் வேலைக்குச் சென்றால், அந்தக் குடும்பமே உயரும் என்று சொல்லப்படுவதைப் போல கபடியால் கிடைத்த ரயில்வே வேலையால் மமதாவின் குடும்பமும் இந்தக் காலகட்டத்தில் உயர்ந்தது. கபடி விளையாட்டு மூலம் தனக்குக் கிடைத்த பரிசுப் பணத்தை வைத்து சொந்தமாக வீடு கட்டி, தன் பெற்றோருக்கு அர்ப்பணம் செய்தார் மமதா.

2012ஆம் ஆண்டில் பாட்னாவில் நடை பெற்ற முதல் மகளிர் உலகக் கோப்பைக் கபடி போட்டி மமதாவின் தலைமைப் பண்பு வெளிப்பட ஒரு வாய்ப்பாக அமைந்தது.

அந்த உலகக் கோப்பையில் இவரது தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இந்த வெற்றி மமதாவின் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அந்த வெற்றிக்குப் பிறகு மமதாவை கபடி ராணி என்று செல்லமாக அழைக்கத் தொடங் கினார்கள்.

திருமணத்துக்குப் பிறகு விளையாட்டை விட்டுவிட வேண்டும் என்று மமதாவின் பெற்றோர் அவரிடம் ஏற்கெனவே வாக் குறுதி பெற்றிருந்தார்கள். அதனால், திரு மணத்துக்கு முன்பாக அதற்குத் தன்னைத் தயார்படுத்திவந்தார் மமதா.

2013ஆம் ஆண்டில் மமதாவுக்குத் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு கணவர் அபிஷேக்கின் ஆதரவு அவருக்கு முழுமையாகக் கிடைத்தது.

தொடர்ந்து கபடி விளையாடிய மமதா, 2014ஆம் ஆண்டில் மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்றார்.  இதுவரை 11 சர்வதேசப் பதக் கங்களை மமதா பெற்றிருக்கிறார்.

கபடியில் 12 ஆண்டுகளாக நீடித்துவரும் இந்தச் சாதனைப் பயணத்தில் ஒன்பது முறை தேசிய அளவில் தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-  விடுதலை நாளேடு, 13.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக