புதன், 7 நவம்பர், 2018

இந்தியாவின் முதல் டைவிங் வீராங்கனை



அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியிலி ருந்து தரையை எட்டிப் பார்த்தாலே பலருக்கும் தலை கிறுகிறுத்துவிடும். பறக்கும் விமானத்திலிருந்தோ பெரிய மலைகளி லிருந்தோ குதிக்க வேண்டும் என்றால் எப்படி யிருக்கும்? முதுகுத் தண்டு ஜில்லிட்டுப் போய்விடும். பார்ப்பவர்களுக்குப் பீதியூட்டும் இந்த சாகச விளையாட்டை அந்தப் பெண் அநாயசமாகச் செய்து, இந்தியாவின் சாகச மங்கையாக மாறினார். அவர், இந்தியாவின் முதல் ஸ்கை டைவிங் வீராங்கனையான ரேச்சல் தாமஸ். சிறுவயதில் பறவையைப் போல பறக்க முடியாதா என குழந்தைகள் ஏங்குவார்கள். ரேச்சலும் அப்படித்தான் ஏங்கினார். விமானங் களைப் பார்க்கும் போதெல்லாம் பறக்கும் ஆசை, அவருக்குள் பீறிட்டு எழும். சிறுவயதில் மனத்தில் ஆழமாகப் பதிந்த இந்த ஆசை அவர் வளர்ந்த பிறகு செயல்வடிவம் பெறத் தொடங்கியது.

ஆக்ராவில் இந்திய ஸ்கை டைவிங் கூட்டமைப்பு  நடுவானில் பறக்கவும், மலையிலிருந்து குதித்துப் பறக்கவும் பயிற்சி வழங்கிவந்தது. ராணுவத்தினருக்கு மட்டுமே வழங்கப்படும் பயிற்சி இது. ஆனால், சாதாரணக் குடிமகளாக இந்தப் பயிற்சியைப் பெறும் பாக்கியம் ரேச்சலுக்கும் கிடைத்தது. 1979ஆம் ஆண்டில் 24 வயதில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகுதான் அந்தப் பயிற்சியில் ரேச்சல் சேர்ந்தார். அப்படிக் கிடைத்த பொன்னான வாய்ப்பைப் பயன் படுத்தி அடிப்படை பயிற்சியை முடித்து ஸ்கை ஜம்பிங் செய்யக் கற்றுக்கொண்டார்.

ஸ்கை ஜம்பிங், டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளில் ஆண்கள் மட்டுமே ஈடு பட்ட காலம் அது. அந்தச் சாகசத்தில் களம்கண்ட முதல் இந்தியப் பெண் என்ற சிறப்போடு ஸ்கை டைவிங்கில் குதித்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு அவர் செய்த இந்தச் சாகசம், இந்தியா முழுவதும் அவருக்குப் புகழ் வெளிச்சத்தைத் தந்தது. இந்தியாவின் முதல் பெண் ஸ்கை டைவர் என்ற சிறப்பு பெற்றதால், அந்தச் சாகச விளையாட்டில் ஈடுபட அவருக்கு ஏ லைசென்ஸ் சான்றிதழை இந்திய ஸ்கை டைவிங் கூட்டமைப்பு வழங்கியது.

1983ஆம் ஆண்டில் பல நாடுகளுக்குச் சென்ற ரேச்சல், காட்சி ரீதியிலான டைவிங் செய்து அசத்தினார். தொடர்ந்து ஸ்கை டைவிங்கில் இவர் செய்துகாட்டிய சாகசங்கள் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியை ஈர்த்தன. ஸ்கை டைவிங்கில் மேலும் நுணுக் கங்களை அறிந்துகொள்ள அரசாங்கமே அவரை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தது.

இந்தப் பயிற்சியின்போது கலிபோர்னி யாவில் 150 முறை டைவிங் செய்து தனது பயிற்சியை நிறைவு செய்தார். பயிற்சி யாளருடன் ஒருசேர சேர்ந்து நடுவானில் குதிக்கும் டேண்டம் ஜம்பிங் எனும் பயிற்சி யையும் முறைப்படி கற்றுத் தேர்ந்தார்.  நேரத்தைக் கணக்கிட்டுத் துல்லியமாகக் குதிக் கும் பயிற்சியிலும் நிபுணத்துவம் பெற்றார்.

கடல் கடந்த சாகசம்


தொடர்ந்து ஸ்கை டைவிங்கிலும் ஜம்பிங்கிலும் ஈடுபட்டுவந்தபோதும், சில ஆண்டுகள் கழித்துத்தான் சாகசப் போட்டி யாளராக ரேச்சல் களமிறங்கினார். அவரது திறமையை வெளிப்படுத்த 1987ஆம் ஆண்டு உலக பாராசூட்டிங் வாகையர் பட்டப் போட்டி தென் கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற்றது. இந்தியா சார்பாகப் பங்கேற்ற முதல் நபர் என்ற பெருமையோடு இந்தப் போட்டியில் ரேச்சல் பங்கேற்றார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி இலக்கைப் பூர்த்தி செய்தார் ரேச்சல்.

1989ஆம் ஆண்டு தாய்லாந்து ஓபன் பாராசூட்டிங் வாகையர் பட்டப்போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற அதே காலகட்டத்தில் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க ரேச்சல் தவற வில்லை.

பெருமைமிகு அங்கீகாரம்


1991ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் நடந்த ஸ்கை டைவிங் போட்டியில் பங்கேற்று இலக்கை நிறைவு செய்தார். இந்திய விமான சாகசக் கூட்டமைப்பு நடத்திய இந்தப் போட்டி யில், பெண் போட்டியாளராகப் பங்கேற்ற, ஒரே வீராங்கனை ரேச்சல் மட்டுமே. இதே போல 1995ஆம் ஆண்டில் ஆக்ராவில் நடைபெற்ற தேசிய ஸ்கை டைவிங் வாகையர் பட்ட போட்டியில் பங்கேற்று இலக்கை நிறைவு செய்து சாதித்தார்.

1995ஆம் ஆண்டில் போபால் நகரில் தேசிய இளையோர் திருவிழா நடை பெற்றபோது நடந்த ஒரு நிகழ்வை ரேச்சல் பெருமையான விஷயமாகக் குறிப்பிடுவது வாடிக்கை. இந்த நிகழ்வில் அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவும் பங்கேற்றார். ரேச்சல் தரையை நோக்கி வரும் போது எந்தப் பகுதியில் அவர் தரையிறங் குவார் என்பதை அறிய ஆர்வமிகுதியால் சங்கர் தயாள் சர்மா எழுந்து நின்று பார்க்க ஆரம்பித்தார். வானில் பறந்தபோதே இதைக் கண்ட ரேச்சல், இதைத் தனக்குக் கிடைத்த பெருமைமிகு அங்கீகாரமாகக் குறிப்பிடுகிறார்.

18 நாடுகளில் 656 முறை ஸ்கை டைவிங் செய்து சாதித்திருக்கிறார் ரேச்சல். 16 முறை விமானத்திலிருந்து நடுவானில் குதித்து, சாகசத்தை அரங்கேற்றியிருக்கிறார். இவரது வீரதீர சாகசத்தைக் கண்டு தேசிய சாகச விளையாட்டு விருதை மத்திய அரசு வழங்கிக் கவுரவித்தது. 2005ஆம் ஆண்டில் இந்தி யாவின் நான்காவது பெரிய விருதான பத்மசிறீ விருதும் ரேச்சலுக்கு வழங்கப்பட்டது. தற்போது 63 வயதாகிவிட்ட நிலையிலும் ஸ்கை டைவிங் செய்கிறார். இதற்காக தினமும் 6 கி.மீ. தொலைவு நடப்பதையும் ஓடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஸ்கை டைவிங் பயிற்சியாளராகவும் ஆசிரி யராகவும் செயல்பட்டு இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டிவருகிறார்.

- விடுதலை நாளேடு, 6.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக