வியாழன், 4 அக்டோபர், 2018

அர்ஜூனா விருது பெற்ற முதல் வீராங்கனை



வில்வித்தை விளையாட்டில் சொல்லிக் கொள்ளும் அளவுக்குப் பெண்கள் இல்லை. சிறுமியாக இருந்தபோது வில்வித்தைப் போட்டி களில் காலடி எடுத்துவைத்த அந்த வீராங்கனை, ஒலிம்பிக் போட்டிவரை பங்கேற்று இந்தியா வுக்குப் பெருமை சேர்த்தார். சர்வதேச அளவில் புகழ்பெற்றார். அவர், டோலா பானர்ஜி.

கொல்கத்தாவுக்கு அருகே உள்ள பாராநகர் தான் டோலா பானர்ஜியின் சொந்த ஊர். சிறு வயதில் மற்ற பிள்ளைகளைப் போல அல்லாமல் டோலாவுக்கு அம் பெய்தும் விளையாட்டு மீதே ஆர்வம் இருந்திருக்கிறது. அந்த விளை யாட்டில் அவர் ஆர்வமாக இருக்கவே, பாராநகரில் உள்ள வில் வித்தைப் பயிற்சி மய்யத்தில் அவருடைய பெற்றோர் டோலாவைச் சேர்த்தனர். படிப்புக்குப் பங்கம் வராமல் வில்வித்தை விளையாட்டைக் கற்றுக்கொண்ட டோலா, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெறத் தொடங்கினார். படிப்படியாக முன்னேறிவந்த டோலா, 1996இல் முதன்முறையாகத் தேசிய வாகையர் பட்டப் போட்டியில் பட்டம் வென்றார். அதற்கு அடுத்த ஆண்டே டோலாவுக்குச் சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது டோலாவுக்கு 17 வயதுதான். 1996இல் சான்டியாகோவில் நடைபெற்ற இளையோர் உலக வாகையர் பட்டப் போட்டியில் பங்கேற்றதுதான் இவரது சர்வதேச அறிமுகப் போட்டி. இந்தப் போட்டியில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், அங்கே பெற்ற அனுபவம் மற்ற போட்டிகளில் அவருக்குப் பலமாக இருந்தது. அடுத்த ஆண்டே  லாங்க்வி ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுத் தன் திறமையை வளர்த்துக்கொண்டார்.

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய காலத்தில், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதை எக்காரணம் கொண்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. 1999இல் ஷில்லாங்கில் தேசிய வில்வித்தை வாகையர் பட்டப் போட்டி நடைபெற்றது.  அந்தப் போட்டியில் அவர் வாகையர் பட்டம் வென்றார். ஒரு வகையில் இது தேசிய அளவில் அவர் பெற்ற முதல் வெற்றியும்கூட. புத்தாயிரத்தில் தொடங்கி அடுத்த சில ஆண்டுகள்வரை சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் மாறிமாறிப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார் டோலா.

இதில் குறிப்பிடும்படியாக 2001இல் அமராவதியில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். வில்வித்தையில் ரெகர்வ் பிரிவில் தேர்ச்சிபெற்றவராக விளங்கிய டோலா, 2002-ல் நடந்த தேசிய வாகையர் பட்டப் போட்டியில்  தங்கத்துக்கு வைத்த குறி தப்பவில்லை. இந்தப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார் டோலா. 2007இல் விஜயவாடாவில் நடந்த தேசிய வாகையர் பட்டப் போட்டியிலும் தங்கப் பதக்கம் இவர் வசமானது.

முதல் ஒலிம்பிக் வீராங்கனை

தேசிய விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்ல; இந்தக் காலகட் டத்தில் தொடர்ச்சியாகச் சர்வதேசப் போட்டிகளிலும் டோலா பங்கேற்றார். 2001இல் ஹாங்காங் ஆசிய வாகையர் பட்டப் போட்டி, 2003இல் மியான்மரில் நடந்த ஆசிய வாகையர் பட்டப் போட்டிகளிலும் பங்கேற்றபடி இருந்தார். 2001இல் பெய்ஜிங்கில் நடந்த உலக வில் வித்தைப் போட்டி பெரிய அளவில் அவரைச் சோதிக்க, 2003இல் நியூ யார்க்கில் நடந்த உலக வாகையர் பட்டப் போட்டி அவருக்குக் கைகொடுத்தது. தனி நபர் பிரிவில் சிறப்பாக விளையாடி 13ஆவது இடத்தைப் பிடித்தார் டோலா. அவருடைய இந்தச் சிறப்பான செயல் பாடு, 2004இல் ஏதென்சில் நடந்த ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற உதவியது. ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் டோலா பங்கேற்றதன் மூலம் ஒலிம்பிக் வில்வித்தைப் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றார். உலக வாகையர் பட்டப் போட்டியில் 13ஆவது இடத்தைப் பிடித்திருந்ததால், அவர் மீது ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக பரிச்சயமில்லாத தென்னாப்பிரிக்க வீராங்கனையிடம் தோல்வி யடைந்து முதல் சுற்றிலேயே வெளி யேறினார் டோலா. ஆனால், குழுப் பிரிவில் இந்தியா 8ஆவது இடத்தைப் பிடிக்க பெரிதும் உதவினார். ஒட்டுமொத்தமாக ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 52ஆவது இடத்தைப் பிடித்து ஏமாற்றமடைந்தார் டோலா.

உலக வாகையர்

டோலாவின் பயணத்தில் மறக்க முடியாத ஆண்டு 2007. அந்த ஆண்டு இங்கிலாந்தில் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. தனிநபர் பிரிவில் சிறப்பாக விளையாடி, தங்கப் பதக்கம் வென்று அசத்தினார் டோலா.  இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியனாக வலம்வந்தார். இதனால் 2008இல் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் பெரிய அளவில் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் இருந்தது. ஆனால், அந்த ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவிலும் அவர் அங்கம் வகித்த குழுவும் தகுதிச் சுற்றுக்குக்கூட முன்னேறாமல் மூட்டை கட்டியது பெரும் சோகம்.

காமன்வெல்த் சாதனை

இந்தத் தோல்விக்குப் பிறகு அடுத்த இரு ஆண்டுகள் பெரிய அளவில் சர்வதேசப் போட்டிகளில் டோலா பங்கேற்கவில்லை. 2010இல் டில்லியில் காமன்வெல்த் போட்டி நடந்தபோதுதான் களத்துக்கு வந்தார். தாய்நாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் அங்கம் வகித்த வில்வித்தைக் குழு, தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. தனி நபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தன் பெயரை நிரூபித்தார் டோலா.

வில்வித்தைப் போட்டிகளில் இந்திய அளவிலும் உலக அளவிலும் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்த டோலா பானர்ஜியை அங்கீ கரிக்கும்வகையில் 2005இல் மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கிக் கவுரவித்தது. இந்த விருதைப் பெற்ற முதல் வில்வித்தை வீராங்கனை டோலாதான்.

- விடுதலை நாளேடு, 2.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக