செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

பெண்களுக்கான சட்டங்கள்


1925    இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் மனைவி, பெண் குழந்தைகளுக்கு சொத்து உரிமை வழங்கப்பட்டது.

1929  குழந்தை திருமணத் தடைச் சட்டம் இயற்றப்பட்டது.

1955 திருமணச் சட்டப்படி பெண்களின் திருமண வயது 17 வயதாக அறிவிக்கப்பட்டு, தற்பொழுது 21 வயதாக உயர்த்தப்பட்டு பின்பற்றப் படுகின்றது.

1956  வாரிசுரிமைச் சட்டம், பெற்றோர்களின் சொத்துக்களையடைய பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

1956 விதவைகள் மறுமணச் சட்டம்,  விதவைகள்  மறுமணத்தை அங்கீகரிகத்து சட்டம்.

1961   மகப்பேறு நலச்சட்டம் - மகப்பேறு காலத்தில் பெண்கள் விடுப்பு எடுக்கவும் அக்காலத்தில் ஊதியம் பெறவும் உறுதி செய்யப்பட்டது.

1961 வரதட்சணை ஒழிப்புச் சட்டம் (1984 இல் திருத்தப்பட்டது). வரதட்சணை வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டணை.

1986  பெண்களை அநாகரிகமாகக் காட்டுவதை தடை செய்யும் சட்டம்.

1989 வாரிசுரிமைச்  சட்டம் - பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் சமபங்குரிமை.

1990  பெண்களுக்கான தேசிய ஆணையம்.

1994      குழந்தை பிறப்புக்கு முன் பாலியல் பகுப்பாய்வு நுட்பங்கள் சட்டம் - பெண் சிசுவை கருவிலே அழிப்பதை தடுப்பதற்கு சட்டம்

2005 குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு சட்டம்.

2013  பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை, தீர்வு சட்டம்.
-விடுதலை,22.8.17

பெண்ணுக்கும், ஆணுக்கும் சம வாய்ப்பும், சம ஊதியமும் எப்போது?



ஆணாதிக்கம் காரணமாக 47 சதவீதம் பெண்கள் படித்தவர்களாக இருந்தாலும், உழைப்புப் பங்களிப்பு என்று வருகிறபோது பெண்கள் 29 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறார்கள்.

வேலைக்குப் போகும் பெண்கள் என்று வரும் போதே பொதுவாக வெள்ளுடைப் பணிகள் என்ற ழைக்கப்படும் அலுவலக வேலைகளை மட்டுமே நாம் நினைத்துப் பார்க்கிறோம். பெண்கள் வேலைக் குப் போகலாமா வேண்டாமா என்பது குறித்தெல்லாம் பெரும் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டவை இந்தப் பணிகள் பற்றி மாத்திரம்தான். இந்த வேலைகளுக்குப் பெண்களை அனுப்புவதில்தான் இந்தச் சமுதாயத் துக்குச் சங்கடமெல்லாம். பெண் மென்மையானவள், அவளை வேலைக்கு அனுப்பி சிரமப்படுத்தக் கூடாது என்று சொல்வதெல்லாம்கூட இந்தப் பணி களுக்குப் பெண்களை அனுப்புவது குறித்து மட்டும் தான்.

இந்த விவாத வரையறைகளுக்குள் கிராமங் களில் காலங்காலமாகத் தங்கள் உடலுழைப்பைச் செலுத்திக் கொண்டிருக்கிற பெண்கள் வரமாட் டார்கள். வயல் காட்டில் சேற்றிலும் சகதியிலும் பெண்கள் இறங்காத காலம் என்ற ஒன்று எப்போதும் இருந்தது கிடையாது. உச்சி வெயிலில் அவர்கள் குனிந்தபடியே வேலை பார்க்கிறார்கள். பெண் வேலைக்குப் போகலாமா என்ற விவாதத்தில் இவர் களுக்கு இடமில்லை. இன்றும்கூட வேலைக்குச் செல்லும் பெண்கள் எண்ணிக்கை நகரத்தோடு ஒப்பிடும்போது கிராமத்தில் தான் அதிகம். ஆனால், பொதுப்புத்தியில் நகரங்களில் தான் பெண்கள் வேலைக்குப் போவதாகப் பதிந்துபோயுள்ளது.

பெண் உழைப்பு என்பதை கிராமம் சார்ந்தும், நகரம் சார்ந்தும் பிரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதை ஒருவகையில் உடல் சார்ந்த உழைப்பு, அறிவு சார்ந்த உழைப்பு என்று வகைப்படுத்தலாம். உடலு ழைப்பில் (பெரும்பகுதியும் கிராமத்தில்) பெண்கள் திருமணத்துக்கு முன் குறைவாகவும் திருமணத் துக்குப் பின் அதிகமாகவும் ஈடுபடுகிறார்கள். அறிவுசார் உழைப்பில் (பெரும்பகுதி நகரத்தில்) பெண்கள் திருமணத்துக்கு முன் அதிகமாகவும் திருமணத்துக்குப் பின் குறைவாகவும் ஈடுபடு கிறார்கள். கிராமங்களில் பெண்கள் திருமணத்துக்குப் பின் அதிகமாக வேலைக்கு அனுப்பப்படுவதோடு தள்ளாத முதுமையிலும் தங்கள் உழைப்பைத் தொடர வேண்டிய நெருக்கடி இருக்கிறது. 

அனைத்து நிலைகளிலும் குடும்ப வறுமையும் பல நேரங்களில் ஆதரவற்ற நிலையுமே வெளியில் வேலைக்குச் செல்லும் நிர்ப்பந்தத்தை இவர்களுக்கு ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் பெண் வெளியில் வேலைக்குச் செல்ல நேர்வதே அவளுக்கு நேரும் துன்பமாகவே பார்க்கப்படுகிறது, உணரப்படுகிறது. அந்த வேலை அவளின் தன்மதிப்பை உயர்த்து வதாகப் பார்க்கப்படுவதில்லை. ஒருவகையில் அந்தப் பெண் வேலைக்குச் செல்வது என்பது அந்த வீட்டு ஆணின் இயலாமையாகவோ அவமான மாகவோ பார்க்கப்படுகிறது. எனவே, குடும்ப வருமானம் ஓரளவு அதிகரித்தால்கூட, உடனே பெண் வேலைக்குப் போவது நிறுத்தப்பட்டு விடுகிறது.

உழைப்புச் சந்தையில் அவள் எப்போதுமே உதிரியாகவே இருக்கிறாள். இந்தச் சமுதாயச் சூழலில் அந்தப் பெண்ணே தான் உழைக்க நேர்ந்தது குறித்து கழிவிரக்கத்துடனேயே சிந்திக் கிறாள். தன் உழைப் பின் மீது பெருமிதம் கொள்ள முடியாத நிலையில், அந்தப் பணியிடங்கள் அவ ளுக்குக் கவுரமான வையாக இல்லை என்பதன் தொடர்ச்சியாக அவை பாதுகாப்பானவையாகவும் இருப்பதில்லை. இந்தப் பின்னணியில்தான் பெண் ணின் உழைப்பு அந்தச் சந்தையில் பொருளாதார ரீதியாக ஆணின் உழைப் புக்குச் சமமான மதிப்பைப் பெறாமல் குறைவான ஊதியத்துக்குரியதாக இருக் கிறது.
-விடுதலை,22.8.17

சனி, 24 ஜூன், 2017

இமயம் தொட்ட இந்தியப் பெண்கள் மாலிக் சகோதரிகள்



விளையாட்டுகளில்கூட நம் சமூகத்தில் ஆண்பால், பெண்பால் பேதம் இருக்கிறது. இதெல்லாம் போன தலைமுறை உருவாக்கிவைத்த பழங்கதைகள். இந்தத் தலைமுறைப் பெண்கள் இந்தப் பழங்கதைகளையெல்லாம் தாண்டி இமாலயச் சாதனைகளைப் படைத்துவருகிறார்கள். அவர்களுள் சிலர் இமயத்திலேயே ஏறிச் சாதனை படைத்துவருகிறார்கள்.

உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இந்தச் சிகரத்தில் ஏற 1921-லிருந்தே முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. என்றாலும் 1953-ல்தான் முதன்முதலில் எவரெஸ்ட்டில் மனிதனின் காலடி பட்டது. ஏனெனில், எவரெஸ்ட் ஏறுவது அவ்வளவு எளிதானதாக இருக்க வில்லை. கடும் குளிரைத் தாங்கி, பனிச் சரிவிலிருந்து மீண்டு ஒருவர் உச்சியைத் தொடுவது கடினம். அப்படித் தொட்டாலும் திரும்பிவருவது அதிசயம். அதனால்தான் அது உலக சாதனையாகக் கொண்டாடப்படுகிறது. இதுவரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று 292 பேர் இறந்திருக்கிறார்கள். அவர்களில் 200 பேரின் உடல் களைத்தான் மலை யேறுபவர்கள் மைல்கற்களாகப் பாவித்துவருகிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த டிஸ்வாங் பல்ஜாரின் 1996-ல் மலைச் சரிவின்போது இறந்துவிட்டார். பச்சை நிறக் காலணியுடன் கிடக்கும் அவரது உடல் கிரீன் பூட் என்னும் பெயரில் மைல்கல்லாகப் பயன்பட்டுவருகிறது.

இந்தப் பின்னணியுடன் பார்த்தால் எவரெஸ்டில் ஏறுவதிலுள்ள அறைகூவல்கள் புரியும். வாழ்நாளில் ஒருமுறை எவரெஸ்ட் ஏறுவதே பெரும் சாதனைதான். அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அன்ஷு ஜாம்சென்பா பத்து நாட்கள் இடைவெளியில் இருமுறை ஏறிச் சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையை 2011இல் அவர் நிகழ்த்தினார். அத்துடன் நின்றுவிடவில்லை. அடுத்து 2013இல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம் தொட்டார். ஆனால் இந்தச் சாதனையை நேபாள அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை. கடந்த மாதம் 12ஆம் தேதி நான்காவது முறையாக எவரெஸ்ட்டில் ஏறியுள்ளார். இந்த ஆண்டு அன்ஷுவுடன் ஏறத் தொடங்கியவர்களில் சிலர் இறந்துவிட்டனர். சிலர் காணாமல் போய்விட்டனர். இவரது சொந்த ஊர் பம்டிலா. 38 வயதான இவர் இரு குழந்தைகளுக்குத் தாய்.

1921இல் தொடங்கிய எவரெஸ்ட் ஏறும் பயணத்தில் ஆயிரக்கணக்கானோர் முயன்றிருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் முயன்றுவருகிறார்கள். இவர்களில் பலர் பாதியிலேயே திரும்பியிருக்கிறார்கள். பலர் திரும்பாமல் எவரெஸ்ட் பனியில் உறைந்து

போயிருக்கிறார்கள். இந்தத் தடைகளைக் கடந்து கடினமான இலக்கை நூற்றுக் கணக்கான பெண்கள் மட்டுமே அடைந்திருக்கிறார்கள்; சாதனை படைத்திருக் கிறார்கள்.

முதல் பெண்

இந்தச் சாதனைப் பட்டியலைத் தொடங்கிவைத்தவர் ஜப்பானைச் சேர்ந்த ஜுன்கோ டபெய்.

1975இல் எவரெஸ்ட்டை அடைந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்தார். இதுவரை இமயம் தொட்டு இமாலயச் சாதனையைப் படைத்த 492 பேர்களுள் இந்தியப் பெண்களுக்கும் கணிசமான பங்குண்டு. பச்சேந்திரி பால்தான் எவரெஸ்ட் தொட்ட முதல் இந்தியப் பெண். 1984ஆம் ஆண்டு அவர் இந்தச் சாதனையைப் படைத்தார். உத்தராகண்ட் மாநிலத்தில் நகுரி என்னும் கிராமம்தான் இவரது சொந்த ஊர். அந்தக் கிராமத்தின் முதல் பட்டதாரிப் பெண் இவர்தான். கல்லூரியில் படித்தபோது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றுப் பதக்கங்கள் பெற்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து சாகசத்துக்காக ஒருமுறை மலையேறியிருக்கிறார். பிறகு மலையேற்றத்தையே தன் வாழ்க்கையாகக் கொண்டார். அதற்காக முறையான பயிற்சி எடுத்துக் கொண்டார். முதலில் கங்கோத்ரி, ருத்ரகிரியா ஆகிய மலைகளில் ஏறினார். 1984ஆம் ஆண்டு மே 23 எவரெஸ்ட் சிகரம் தொட்டார். இந்தியாவே அவரைக் கொண்டாடியது. அந்த ஆண்டே மத்திய அரசு பத்மசிறீ விருது வழங்கி அவரைக் கவுரவித்தது. அர்ஜூனா விருது போன்ற பல விருதுகளும் அவரைத் தேடி வந்தன.

அரிதிலும் அரிது

அருணிமா சின்ஹா உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எளிமையான குடும்பத்தின் கடைசிக் குழந்தை. இளம் வயதிலேயே கைப்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ளவர். விளையாட்டுத் துறையில் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். ஆனால், குடும்பச் சூழல் கருதித் தனது விளையாட்டுத் திறமையை வைத்து ஏதாவது அரசு வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். மத்திய தொழில் பாதுகாப்புப் படைப் பணிக்கான நேர்காணலுக்குச் சென்றபோது 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி அருணிமாவின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற வழிப்பறித் திருடர்கள் அவரை ரயிலிலிருந்து தள்ளிவிட்டனர். கால் ரயில் சக்கரத்தில் சிக்கிச் சிதைந்தது. காலை இழந்தபோதும் கலங்காத அவர், ஏதாவது ஒரு விதத்திலாவது சாதித்தே ஆக வேண்டும் என நினைத்தார். கால் போய்விட்டது. இனி என்ன செய்ய முடியும் என்று நினைப்பவர்களுக்குப் பதிலாக ஊனமுற்ற காலைக் கொண்டு இமயம் தொடத் துணிந்தார். இரண்டே ஆண்டுகளில் 2013இல் 52 நாட்கள் பயணத்தில் தன் ஒற்றைக் காலால் இமயம் தொட்டார். ஒற்றைக் காலில் இமயம் தொட்ட முதல் பெண் என்ற உலக சாதனைக்கும் சொந்தக்காரரானார்.

முதல் சிறுமி

மலாவத் பூர்ணா, தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்திலுள்ள பகலா என்னும் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிச் சிறுமி. இவருடைய தந்தை விவசாயக் கூலி. அரசுப் பள்ளியில் இலவசக் கல்வி பயின்றுவந்திருக்கிறார். ஆபரேஷன் எவரெஸ்ட் என்னும் திட்டத்துக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். லடாக், டார்ஜிலிங் ஆகிய மலைகளில் முதலில் ஏறினார். 2014ஆம் ஆண்டு தனது 13 வயதில் எவரெஸ்ட் ஏறினார். மிகக் குறைந்த வயதில் இமயம் தொட்ட பெண் என்ற உலக சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார் பூர்ணா. இவரது போராட்ட வாழ்க்கை திரைப்படமாக வெளி வந்துள்ளது.

இரட்டையர் சாதனை

இன்னொரு புதிய சாதனையை தஷி மாலிக், நுங்ஷி மாலிக் சகோதரிகள் படைத்துள்ளனர். இரட்டையர் களான மாலிக் சகோதரிகள் 2013ஆம் ஆண்டு இணைந்து இமயம் தொட்டார்கள். முதன்முதலில் எவரெஸ்ட் தொட்ட பெண் இரட்டையர்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளனர். அரியானாவைச் சேர்ந்த இந்தச் சகோதரிகள் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் மகள்கள். அதனால் இவர்கள் உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழ்நாடு, கேரளா, மணிப்பூர், மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட் எனப் பல மாநிலங்களில் கல்விபயின்றுள்ளனர்.

நீங்கள் யார் எனக் கேட்டால், தாய், மனைவி, மகள் போன்ற குடும்ப அடையாளங்களையே நம் இந்தியப் பெண்களில் பெரும்பாலானோர் சொல்வார்கள். ஆனால், இந்தக் குடும்ப அடையாளங்களைத் தங்கள் சமூக அடையாளங்களாக பெண்கள் உருவாக்க வேண்டியது அவசியம்.

-விடுதலை,20.6.17

விவசாயத்தை நவீனமாக்கும் பெண்!



அங்கிதா குமாவத், அய்அய்.எம். கல்கத்தாவில் படித்த எம்.பி.ஏ. பட்டதாரி. புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த இவர், அந்த வேலையைத் துறந்து பால் பண்ணை விவசாயியாக மாறியிருக்கிறார். மாத்ருத்வ பால் மற்றும் இயற்றை உணவு நிறுவனத்தைத் தற்போது அஜ்மீரில் நிர்வகித்து வருகிறார். அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் பணியாற்றிக் கொண்டி ருந்த அங்கிதா, அந்தப் பணியை உதறிவிட்டு விவசாயத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அவருடைய அப்பா.

அரசுத் துறையில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அவருடைய தந்தை பூல்சந்த் குமாவத், விருப்ப ஓய்வுபெற்று சில ஆண்டுகளுக்கு முன் பால் பண்ணை வியாபாரத்தைத் தொடங்கினார். கலப்படமற்ற உணவைத் தன்னுடைய ஊர் மக்களுக்கு வழங்க வேண்டுமென்ற நோக்கத்தில் இந்தப் பால் பண்ணையை அவர் ஆரம் பித்தார்.  பொறியியல் படித்து பொதுப்பணித்துறையில் பணி யாற்றினாலும் பூல்சந்த் விவசாய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். அதனால், நாமே ஏன் ஒரு மாடு வாங்கி குடும்பத் தேவைக்காக வளர்க்கக் கூடாது என்ற யோசனை அவருக்கு ஏற்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் 3,500 ரூபாய்க்கு ஒரு மாட்டை வாங்கி மகளுக்குக் கலப்படமற்ற பாலையும், பால் பொருட்களையும் கொடுத்திருக்கிறார். இந்தக் கலப்பட மில்லாத உணவைச் சாப்பிட ஆரம்பித்ததும் அங்கிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. பால் பொருட்கள் மட்டு மல்லாமல் மற்ற உணவுப் பொருட்களும் கலப்பட மில்லாமல் சந்தையில் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்த அவர், வீட்டிலேயே காய்கறிகளை விளைவிக்கலாமே என்று நினைத்தார்.   2009இல் அஜ்மீரில் ஒரு நிலத்தை வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினார்.  2014ஆம் ஆண்டு, அப்பாவின் வழித்தடத்தைப் பின்பற்றி, அங்கிதாவும் தன்னுடைய பெருநிறுவன வேலையைத் துறந்தார். தற்போது மாத்ருத்வ பால் மற்றும் இயற்கை உணவு நிறுவனத்தின் இணை உரிமையாளராக இருக்கிறார் அங்கிதா. இவரது பண்ணையில் கோதுமை, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விளைவிக்கிறார். அத்துடன் காளான் வளர்ப்பிலும் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்குக் கொடுக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் அவர். அங்கிதா பொறுப்பேற்ற பின், பலவிதமான தொழில்நுட்பங்களைத் தங்களுடைய பால் பண்ணையிலும் விவசாய முறையிலும் அறிமுகப் படுத்தியிருக்கிறார். மொத்த பண்ணையும் சொட்டு நீர்ப்பாசன முறையிலும் சூரிய ஆற்றலிலும் இயங்குகிறது. மழைநீர் சேமிப்புத் திட்டத்தையும் தங்களுடைய பண்ணையில் நிறுவியிருக்கிறார்.

தங்கள் பண்ணையில் பாரம்பரியம், நவீனம் இரண்டும் கலந்த விவசாய முறை பின்பற்றப்படுகிறது என்று சொல்கிறார் அங்கிதா

-விடுதலை,20.6.17

புதன், 7 ஜூன், 2017

கர்ப்பகால மூடநம்பிக்கைகள்

தன் வயிற்றில் புதிய உயிர் ஒன்றை  ஒன்பது மாதங்களில் உருவாக்கும் பெண்ணின் தியாகம்மகத்தானது. தாயின் வயிற்றில் கரு உருவாகி வளர்வது மிகவும் சிக்கலானது. இந்தக் காலகட்டத்தில் கணவன், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரின் கவனமும் அந்தப் பெண் மீது இருக்கும்.

கர்ப்பகாலத்தில், பெண்ணின் உடலில் பலவிதமான அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் சில அறிகுறிகளை வைத்துப் பிறக்கப்போவது ஆணா, பெண்ணா எனக் கணித்துவிட முடியும் என உலகம் முழுவதும் உள்ள மக்கள் தவறாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

தவறான நம்பிக்கை  1

தாயின் வயிற்றுக் கோணத்தை வைத்தும் பருமனை வைத்தும் பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. கர்ப்பமான தாயின் வயிறு மேலே இருந்தால் பெண் குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம் எனவும் கீழே இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் எனவும் கூறுவர்.

உண்மை நிலை:

தாயின் வயிற்றில் தோலுக்குக் கீழே உள்ள கொழுப்புப் படலத்தின் அளவு, தசை வலிமை, வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நிலை ஆகியவற்றைப் பொறுத்தே கருவைச் சுமக்கும் வயிற்றின் அளவு மாறுபடும். எனவே, தாயின் வயிற்றின் அமைப்புக்கும் பிறக்கப்போகும் குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தவறான நம்பிக்கை  2

தாய்க்கு உப்புச் சுவை பிடித்தால் ஆண் குழந்தையும் இனிப்புச் சுவை பிடித்தால் பெண் குழந்தையும் பிறக்கும்.

உண்மை நிலை:

நமது உடலில் தாதுஉப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும்போது உடல் தானாகவே சுவைத் தேடல் மூலம் குறைபட்ட ஊட்டச்சத்தைத் தேடும். இதை ஃபுட் க்ரேவிங் என்பார்கள். ஃபுட் க்ரேவிங்குக்கும் குழந்தையின் பாலினத்துக்கும் எந்தச் தொடர்பும் இல்லை.

தவறான நம்பிக்கை  3

கர்ப்பமுற்ற மூன்றாவது மாதத்தில் தாய் அதிகமாக வாந்தி எடுத்தால், குழந்தைக்கு முடி அதிகம் இருக்கும்.

உண்மை நிலை:

குழந்தையின்  உச்சந்தலை, முடியின் அடர்த்தி பரம்பரை மரபணுக்களைப் பொறுத்தது. இதற்கும் வாந்தி, நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்கும் தொடர்பு இல்லை.

தவறான நம்பிக்கை  4

தாய்க்கு வலியில்லாத சுகப்பிரசவம் ஆகியிருந் தால், அவரது மகளுக்கும் சுகப்பிரசவமே ஆகும்.

உண்மை நிலை:

இதற்கு விஞ்ஞானரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. குழந்தையின் எடை, வயிற்றில் குழந்தையின் நிலை, தாயின் இடுப்பு எலும்பின் சுற்றளவு, கர்ப்பகாலத்தில் தாயின் உணவுக்  கட்டுப்பாடு, உடல் ஆரோக்கியம் ஆகியவையே சுகப்பிரசவமா அல்லது சிசேரியனா என முடிவு செய்யும் முக்கியக் காரணிகள்.

தவறான நம்பிக்கை  5

கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்வதால், கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

உண்மை நிலை:

கருவுற்ற தாயின் வயிற்றின் கீழ்ப் பகுதியில் (Abdominal wall) ஏழு அடுக்குத் தோல் படலம் கருவைப் பாதுகாக்கிறது. இந்தத் தோல் படலம், வெளியில் இருந்து வரும் எதிர்பாராத அதிர்வுகளிடமிருந்து கர்ப்பப்பை நீரில் மிதக்கும் கருவைப் பாதுகாக்கும். எனவே, மென்மையான உடலுறவு பாதிக்காது

மேலும் கரு முட்டையில் விந்து நுழைந்து, கர்ப்பப் பையில் கரு பதிந்ததும், செர்விக்ஸ் எனப்படும் கர்ப்பப்பை வாய் இறுக்கமாக மூடிக்கொள்ளும். இதனால் மேற்கொண்டு விந்து நுழைய முடியாது. ஆகையால், உடலுறவு கொள்வதால், குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், அதீத ரத்தப் போக்கு, வெள்ளைப்படுதல், கருச்சிதைவுக்கான வாய்ப்பு மற்றும் வேறு சில கோளாறுகள் உள்ள தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் உறவு வைத்துக் கொள்வது நல்லது.

தவறான நம்பிக்கை  6

குங்குமப் பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாகப் பிறக்கும்.

உண்மை நிலை:

தோலின் நிறம், மெலனின் நிறமியின் அளவைப் பொறுத்தது. குழந்தையின் கண், காது, மூக்கு, கை, கால் உள்ளிட்ட உடற்பகுதிகளின் அமைப்பு, தோலின் நிறம், குணாதிசயங்கள் ஆகியவை, தாய்,  தந்தை, முன்னோர்கள் ஆகியோரின் மரபணுக்களைச் சார்ந்தது. தாய் ஊட்டச்சத்து பானங்களைப் பருகுவதன் மூலமாகவோ குங்குமப்பூவைப்  பாலில்  கலந்து  சாப்பிடு வதனாலோ, குழந்தையின் தோலின் நிறத்தில் எந்த மாறுதலும் ஏற்படாது.

தவறான நம்பிக்கை  7

கர்ப்பகாலத்தில் தாயின் ஊட்டச் சத்துக்காக இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிட்டால், குழந்தையின் தோலின் நிறம் கறுக்கும்.

உண்மை நிலை:

இது மிகத் தவறான நம்பிக்கை. கர்ப்பிணிக்கு கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து மிகவும் அவசியம். இந்தியாவில், பிரசவ காலத்தில் ஏற்படும் மரணங்களில், 50 சதவிகிதம் ரத்தச்சோகையினால் ஏற்படுகிறது. இந்த நோய் வராமல் தடுக்க, மருத்துவர் ஆலோசனையின் பேரில் தாய்மார்கள் கட்டாயம் இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.

தவறான நம்பிக்கை  8

மாதவிலக்கு தள்ளிப்போன மூன்றாவது மாதத்தில்தான் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உடனே செய்து கொண்டால், கரு கலைந்துவிட வாய்ப்புஉண்டு.

உண்மை நிலை:

இந்தத் தவறான நம்பிக்கை, தமிழகத்தில் பல குடும்பங்களில் நிலவுகிறது. சிக்கலான பிரசவத்தில் மிக முக்கியமானது எக்ட்டோபிக் கர்ப்பம் (Ectopic pregnancy).  இந்த நிலையில் கர்ப்பப்பைவாய் (Cervix) வழியாக உள்ளே நுழையும் விந்தணு, கரு முட்டையை அடையாமல், இடையில் உள்ள கருக்குழாயில் (Fallopian tube) தங்கி, அங்கேயே கரு உருவாகி வளரத் தொடங்கிவிடும். கருவின் எடையைத் தாங்க முடியாமல் கருக்குழாய் வெடித்து, சிசுவுக்கு ஆபத்து ஏற்படும். கரு, முட்டையில்தான் உருவாகி வளர்ந்து வருகிறது என்பதை உறுதிசெய்துகொள்ள, மாதவிலக்கு தள்ளிப்போனதுமே கட்டாயம் மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து, ஸ்கேன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தவறான நம்பிக்கை  9

தாயின் வயிற்றில் மச்சம் இருந்தால், சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும்.

உண்மை நிலை:

மச்சம் (nevus) என்பது, நிறமியைத் தயாரிக்கும் தோல் செல்களான மெலனோசைட்கள், தோலில் ஒரு சில இடங்களில் அளவுக்கு அதிகமாக இருப்பதால் மச்சம்  உருவாகிறது. மனிதர்களுக்கு 40 வயது வரை புதிய புதிய மச்சங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தோலின் நிறத்தைப் பொறுத்து இவை சிவப்பு, கறுப்பு, பழுப்பு எனப் பல நிறங்களில் உடலில் தோன்றும். இதற்கும் கர்ப்பத்துக்கும், பிரசவத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

தவறான நம்பிக்கை  10

குழந்தையின் உடல்பருமன் முன்னோர்களின் மரபணுக்களை மட்டுமே சார்ந்தது.

உண்மை நிலை:

கருவுற்றிருக்கும் தாய்மார்களின் தவறான உணவுப் பழக்கம் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். கருவுற்ற சமயத்தில் அதிக அமிலத்தன்மை உடைய உணவுகள், மசாலா மற்றும் நிறைவுறாக் கொழுப்பு கலந்த உணவுகளைத் தாய்மார்கள் சாப்பிட்டால், அவை குழந்தையின் உடல்பருமனை அதிகரிப்பதோடு, நலத்தையும் பாதிக்கும். எனவே, கருவுற்ற காலத்தில் தாய்மார்கள் காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், தானியங்கள், பருப்பு  பயறு வகைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

 -உண்மை,1-15.5.17