ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

மாதவிடாய் நிற்கும் காலமும் மகளிர்க்குரிய மாற்றங்களும்..!

பெரும்பாலான பெண்களுக்கு ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதாவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கின்றன? ஏன் மாதவிடாய் நிற்கிறது? அதனால் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? அந்த மாற்றங்களை மனரீதியாக எப்படி எதிர்கொள்வது? என்ற விவரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை. அதேபோல, ‘மாதவிடாய் நிற்கும் காலம்’ என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயப்படுவதுண்டு. “இத்தகைய அச்சங்கள் தேவையில்லை. மாதவிடாய் நிற்கும் காலம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்-தான், அந்தக் கட்டத்துக்குள் நுழையும் பெண்கள் ஒருவிதமான அதிர்ச்சி மனநிலைக்கு ஆளாகிறார்கள். பெண்ணின் வாழ்க்கையில் இது அடுத்தக் கட்டம். ஒரு வகையில் சுதந்திரமும் கூட என்கிறார்கள் மருத்துவர்கள்.

மாதவிடாய் நிற்பது இரண்டு விதங்களில் நிகழலாம். ஒரு பெண்ணுக்கு 42 வயது முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் தொடங்கும் மாதவிடாய் நிற்றல் செயல்பாட்டு மாற்றங்கள், அடுத்த மூன்று முதல் பத்து ஆண்டுகளுக்குத் தொடரலாம். மாதவிடாய் நின்றதற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. இயற்கையான முறையில் மாதவிடாய் நிற்றல் ஏற்படும் சராசரி வயது அய்ம்பது. 40 வயதுக்கு முன்பாக மாதவிடாய் நிற்றல் ஏற்படுவது இயல்புக்கு மாறான முன்முதிர்ச்சி (Premature Menopause)நிலைதான். அறுவைச் சிகிச்சை காரணமாகவும் மாதவிடாய் நிற்றல் நடைபெறும். கருப்பை நீக்க அறுவைச் சிகிச்சை (Hysterectomy), அல்லது சினைப்பை நீக்க அறுவைச் சிகிச்சை (Hysterectomy) அல்லது இரண்டாலும் இது நிகழ்கிறது. 12 மாதங்கள் தொடர்ந்து மாதவிடாய் வரவில்லையென்றால்  அது மாதவிடாய் நிற்றல்தான்.
சினைப்பைகள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜஸ்டிரான் ஹார்மோன்கள் சுரப்பைக் குறைப்பதன் விளைவுதான் மாதவிடாய் நிற்றல். ஒவ்வொரு மாதமும் சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியாவதை நெறிப்படுத்துபவை இந்த ஹார்மோன்கள்தாம். மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கிய பெண்களின் சினைப்பையில் வெகுசில கருமுட்டைகள் மட்டுமே எஞ்சி-யிருக்கும் என்பதால் இந்த ஹார்மோன்கள் உற்பத்தியை உடல் குறைத்துக்கொள்கிறது.
மாதவிடாய் நிற்றல் அறிகுறிகள்
மாதவிடாய் நிற்கும் நிலையில் உடல் பல அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இதில் முதன்மையானது மாதாமாதம் வரும் மாதவிலக்கு நிற்பது. சிலருக்கு திடீரென முற்றிலுமாக நின்றுபோகலாம். சிலருக்கு பல மாதங்கள் தள்ளிப் போகலாம். இந்தக் காலகட்டத்திலும் கருத்தரிக்க வாய்ப்புண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால், கடைசி மாதவிலக்கு ஏற்பட்டதில் இருந்து ஓராண்டுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றுவது நல்லது. அதேபோல, கடைசி மாதவிலக்கு ஏற்பட்டதில் இருந்து ஆறு மாதத்துக்கு பிறகு ஏதேனும் ரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.
அடுத்து ஏற்படக்கூடிய அறிகுறி திடீரென உடல்சூடு பரவுதல் (Hotflushes), மற்றும் வியர்த்தல். சிலருக்கு உடல் முழுவதும் சூடு பரவலாம். சிலருக்கு தலைவலி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படலாம். முகம், கழுத்து, மார்பு, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் என சூடு மற்றும் எரிச்சல் உணர்வு பரவலாம். இதைத் தொடர்ந்து அதிகம் வியர்க்கும். ஒரு மணி நேரத்துக்கு சில நொடிகள் இப்படி நடக்கலாம். இது ஆளாளுக்கு வேறுபடும். இந்த அறிகுறி ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் மறைந்து விடும். இரவில் வியர்த்தல் மற்றொரு அறிகுறி. இது தூக்கத்தைக் கெடுத்து சோர்வை ஏற்படுத்தும். பெண்ணுறுப்பில் ஈரத்தன்மை குறைந்து வறண்டு போகத் தொடங்குவது மற்றொரு பொதுவான அறிகுறி. இதனால், சிலருக்கு பாலியல் ஆர்வம் குறையலாம். ஒரு சிலருக்கு இருமும்போதும், தும்மும்போதும் சிறுநீர் கசிதல் (Stressincontinence) ஏற்படலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் போவதைக்
கட்டுப்படுத்த முடியாமை போன்றவை ஏற்படும்.
மூட்டு, தசை வலி ஏற்படும். ‘ஆஸ்டியோ போரோஸிஸ்’ என்னும் எலும்பு அடர்த்திக் குறைதல் நிலை ஏற்பட்டால், சிறு காயங்களுக்கே எலும்பு முறிவு ஏற்படும். இடுப்பு, கை, முதுகுத் தண்டு எலும்புகள்தான் பொதுவாக பாதிப்புக்கு உள்ளாகும். மாதவிடாய் நின்றபிறகு, சிலருக்கு முகத்தில் முடி அதிகமாகலாம். தலைமுடி உதிர்தலும் அதிகமாகலாம். உமிழ்நீர் சுரப்பது குறையும். பற்களும் பலமிழக்கும். சருமம் உலர்ந்து அரிப்பு ஏற்படும். சிலருக்கு சருமத்தில் எரிச்சல், மரத்துப் போதல், ஏதோ ஊறுவது போன்ற உணர்வுகள் ஏற்படும்.
இவற்றுடன் தோல் மற்றும் தலைமுடி மெலிதல், எடை அதிகரித்தல் போன்ற உடலியல் மாற்றங்கள் மாதவிடாய் நிற்றலுடன் தொடர்புடைய முக்கிய உடலியல் மாற்றங்கள் ஆகும். இந்தக் காலகட்டத்தில்தான் இதயம் மற்றும் ரத்தநாளத் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதுபோல, சில உணர்வெழுச்சி பாதிப்புகளும் ஏற்படலாம். அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி, சோகம் என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும்.
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் இந்தக் காலகட்டத்தில், பொறுப்புகள் அதிகரிப்பதால் உண்டாகும் மன அழுத்தத்துடன், இந்த உடலியல் மாற்றங்கள் கொடுக்கும் அசவுகரியங்களும் சேர்ந்து மாதவிடாய் நிற்கும் பெண்களின் மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மாதவிடாய் நிற்றலை எதிர்கொள்ளல்
உடலியல் மற்றும் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும் இக்கட்டத்தில், நல்ல ஆரோக்கிய பழக்கங்களை கடைபிடித்தால், எந்த மாற்றங்களையும் எளிதாக எதிர்கொள்ளலாம். சத்தான சரிவிகித உணவுகள் எடுத்துக்-கொள்வது, குறிப்பாக கால்சியம் நிறைந்த உணவைச் சேர்த்துக்கொள்வது, முடிந்த அளவுக்கு உடற்பயிற்சியில் ஈடுபடுவது, புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தைத் தவிர்த்தல், ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மனநிலையை பராமரிப்பது, தேவைப்பட்டால் மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்-களின் அறிவுரையைப் பெறுவது என எளிதாகவே இந்த கட்டத்தைப் பெண்கள் கடக்க முடியும்.
மாதவிடாய் நிற்றல் ஏற்படுவது ஓர் இயற்கையான செயல்முறை. அதில் நாம் தலையிட முடியாது. ஆனால், அதனால் ஏற்படும் சில விளைவுகளை சமாளிக்கலாம். குறிப்பிட்ட சில அறிகுறிகளையும், அவற்றை எப்படி சமாளிப்பதென்பதையும் இங்கு பார்க்கலாம்:
மாதவிடாய் நிற்றல் சமாளிப்பது எப்படி?
உடல் வலிகள், வலிமைக் குறைதல், சத்துக் குறைபாடுகள்
உடற்பயிற்சி: நடைப்பயிற்சி இதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலை நடைப்பயிற்சி செய்யலாம். நல்ல காற்றோட்டம் கிடைக்கக்கூடிய இடங்கள், பூங்காக்கள், அல்லது கடற்கரை சாலைகளில் நடைப்பயிற்சி செய்யலாம்.
உணவு முறை: பசியெடுக்கும்போது மிக எளிதாக சீரணிக்கத்தக்க உணவுகளை உண்ணுதல் வேண்டும். மசாலா நிறைந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். நீண்ட பட்டினி, உபவாசம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். காலையில் சரியான நேரத்தில் சிற்றுண்டி, மதியம் காய்கள், கீரைகள் கலந்த அளவுடன் ஆன உணவு, இரவு அரை வயிறு மட்டுமே நிரம்பக்கூடிய எளிதில் சீரணமாகக்கூடிய உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். நொறுக்குத் தீனி தவிர்த்துவிட வேண்டும். காபி, டீ, அளவுடன் அருந்த வேண்டும், தவிர்ப்பது மிக நல்லது.
உடல் தளர்ச்சியை போக்க ஊட்டச்-சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், தானியங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். பால், மீன், முட்டை, இறைச்சி, கீரைகள் ஆகியவற்றையும் அவசியம் சேர்த்துக் கொள்ளலாம். கால்சியம் மற்றும் இரும்புச் சத்து, வைட்டமின் பி, ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் மாதவிடாய் நிற்கும் காலத்து சோர்வினைப் போக்கி, உடல் வலிமையை மீட்டெடுக்க முடியும். பயறு மற்றும் பருப்பு வகைகள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கழிவுகளை வெளியேற்றும் தண்ணீர்
மாதவிடாய் நிற்றல் பருவத்தை எட்டி-யவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. சருமத்தை புத்துணர்ச்சி-யாக்கும்.
யோகாவும் உதவும்
தினசரி அரை மணிநேரம் அமைதிப் பயிற்சி மற்றும் யோகா செய்தவன் மூலம் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சரிவிகிதமாக இருக்கும். அட்ரீனலினை ஊக்குவிக்கும். யோகா பயிற்சி, மனம் சம்பந்தப்-பட்ட பிரச்சினைகளுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது. அமைதிப் பயிற்சி, மனதில் ஏற்படும் தேவையில்லாத எண்ணங்-களை வெளியேற்று-கிறது. இதனால் எதையும் தெளிவுடன் அணுக முடிகிறது. மேலும் இதய சம்பந்தமான நோய்களிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
மனம்விட்டுப் பேசுங்கள்
உங்கள் வேதனையை யாரிடமும் சொல்லாமல் தனியாக தவிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் குடும்பத்தினரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். நீங்கள் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறீர்கள் என அவர்கள் புரிந்துகொண்டால், அதிகமாக கவலைப்பட மாட்டார்கள். இப்படிச் செய்யும்போது உங்கள் குடும்பத்தார் பொறுமையோடும் கரிசனை-யோடும் நடந்துகொள்வார்கள். உங்களுக்கு உதவி செய்வதுடன் ஆறுதலாகவும் இருப்பார்கள்.
40 வயதில் இருந்து பெண்கள் இத்தகைய வாழ்வியல் மாற்றங்களை சரியான முறையில் கடைப்பிடித்தால், மாதவிடாய் நிற்கும் கட்டத்தை மிகச் சிரமங்களுடன் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. மிகவும் மகிழ்ச்சி-யாகவே ஏற்றுக்கொள்ளலாம்.
-உண்மை இதழ்,16-31,7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக