திங்கள், 5 ஜூன், 2017

வரலாறு படைத்தீர் வீராங்கனைகளே!



உண்மையிலேயே பெரும் வரலாறு படைத்த விட்டனர் -நம் கழக வீராங்கனைகள். நமது இயக்க வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஏற்படப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தோன்றி விட்டன.

அண்மைக்காலமாக நமது இயக்கத்தில் இயக்க வீராங்கனைகளின் பணிகள் வியப்பை ஊட்டுகின்றன. அவை ஆக்கப்பூர்வமானவை என்று நினைக்கும் பொழுது நெஞ்சம் நிமிர்கிறது - குளிர்கிறது!

மகளிர்ப் பாசறை மாநில செயலாளர் செந்தமிழ்ச் செல்வியும் வடசென்னை கழக மகளிர் அணிச் செயலாளர் பொறியாளர் இன்பக்கனியும், சென்னை மண்டல மகளிர்ப் பாசறை செயலாளர் திருவொற்றியூர் உமாவும், பகுத்தறிவாளர் கழக மாநில செயல் தலைவர் பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வியும், (ஆங்காங்கே உள்ள மகளிர் அணியினருடன்) தமிழ்நாடு முழுவதும் ஒரு சூறாவளி சுற்றுப்பயணம் செய்த நேர்த்தியின் விளைச்சலை கடந்த சனியன்று திருச்சிராப்பள்ளியிலே பளிச்சென்று காணமுடிந்தது.

தமிழர் தலைவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. கருஞ்சட்டை வீரர்களும் திரண்டிருந்தனர் என்றாலும், அவர்களின் மத்தியில் கூட ஒரு மலைப்புதான்.

முந்துகின்றனர் வீராங்கனைகள் என்று கழகத் தலைவர் வெளிப்படையாகவே கூறிவிட்டாரே - இனி அவர்கள் மத்தியிலும் வேகப் புயல் வீறு கொண்டு கிளம்பும் என்று எதிர்பார்க்கலாம்.

“சபாஷ், சரியானப் போட்டி!” என்று சொல்லத் தோன்றுகிறது! அன்று காலை திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்திலே, திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர்ப் பாசறை மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

கலந்துரையாடல் கூட்டம்தானே; மாநிலத்திலிருந்து சில பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள் என்று கணக்கு போட்டிருந் தவர்களுக்குத் தலையைச் சுற்றியது. காலையிலே ஓர் கலந்துரையாடல், மாநாடாக களை கட்டி விட்டது. 1200 பெண்கள் பங்கேற்றனர் என்றால் யாரால்தான் நம்ப முடியும்? மதிய சாப்பாட்டுக்கு போர்க்கால அடிப்படையிலேயே பணிகளை மேற்கொள்ள வேண்டியதாகியது - தங்காத்தாள் தலைமையில்.

அந்த கலந்துரையாடலில் 39 பெண்கள் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது. கழகத்தில் மகளிர் பங்கின் அவசியத்தையும், மகளிர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படாவிட்டால் மறுமலர்ச்சி என்பது முயற்கொம்பே என்பதையும் எடுத்துக் கூறினர்.

அதுவும் இந்தக் காலக்கட்டத்தில் மகளிர் மீதான வன்முறை, பாலியல் கொடுமைகள் தலை தூக்கி நிற்கின்றன. பெண்கள் மத்தியில் கல்வியும், கைநிறைய சம்பாதிக்கும் பொற்காலமும் ஒரு பக்கத்தில் பூத்துக் குலுங்கும் நிலையில், புதுப்புது சவால்களும் தோன்றத்தான் செய்கின்றன. குறிப்பாக ஆணவப் படுகொலைகளில் (வெட்கம் சிறிதுமின்றி கவுரவக் கொலை என்றும் கூறுவோரும் உண்டு.) பெற்றோர்களே தங்கள் மகளைக் கொல்லும் கொடூரங்களும் நிகழ்ந்து கொண்டுள்ளன.

அரசியலிலே அடிப்படையான, ஆழமான, நேர்த்தியான இலட்சியங்கள் ஏதுமற்று கையறு நிலையில் உள்ளவர்கள் - ஜாதி வெறி தீவட்டிகளைத் தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.

இவைப் பற்றியெல்லாம் கலந்துரையாடல் கூட்டத்தில் சூடாகப் பரிமாறப்பட்டன.  தந்தை பெரியார் என்னும் பேராசான் அளித்துச் சென்றுள்ள அழிவில்லா அறிவு மொழிகள் மகளிர் மத்தியில் சென்றால் தான், அவர்கள் அய்யாவின் அந்த மூலிகைச் செல்வங்களை நுகர்ந்தால்தான், சுவாசித்தால்தான் அவற்றைத் தம் வாழ்வின்  படிக்கட்டுகளாகக் கொண்டு கால்களை பதித்தால்தான் ஆதிக்கச் சக்திகளை புறந்தள்ளி, மானமும் அறிவும் உள்ளவர்களாக மணம் வீச முடியும் என்பதையெல்லாம் ஆகா எவ்வளவு அழகாக , அடுக்கடுக்காக   எடுத்து வைத்தார்கள்.

இந்த மாநாட்டுக்கென்றே ஒரு வெளியீடு வரவேண்டும் என்று கழகத் தலைவர் விரும்பினார். அதன் விளைவு - “பெரியார் அறிவுரை பெண்களுக்கு!” (தொகுப்பாசிரியர் கி.வீரமணி) எனும் நூல்! அது. 48 பக்கங்களைக் கொண்டது. திராவிடர் கழக வெளியீடாக பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநாட்டையொட்டி மலர்ந்த மலர்ச்சோலையது! பொருத் தமாக கோபியைச் சேர்ந்த கழக மூதாட்டி லட்சுமி அம்மையார் (வயது 81) அந்நூலை வெளியிட, திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அதனைப் பெற்றுக் கொண்டார். அந்த நூலில் இருந்து ஒரு கருத்தினை கழகத் தலைவர் எடுத்துக் கூறிய, “உண்மையான ஒழுக்கம், நாணயம் வேண்டுமானால் தேவை குறைய வேண்டும், தேவையும் அவசியமும் அதிகமாக அதிகமாக நாணயக்கேடும், ஒழுக்கக்கேடும் வளர்ந்து கொண்டுதான் போகும்” என்ற தந்தைபெரியாரின் வழிகாட்டும் கருத்துகள் தான் - ஆகா எத்தனைச் சிறப்பு!

மதுரை தோழர் ராக்கு தங்கம், இயல்பாகப் பேசியது அனைவரையும் கவர்ந்தது. இத்தகையவர்களையெல்லாம் பிரச்சாரத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். (விரைவில் மகளிரே கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படவும் உள்ளன.)

கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தலைவர் தெரிவித்த கருத்துக்களும், அறிவிப்புகளும் மிகவும் முக்கியமானவை. கழக மகளிர் அணியினருக்கு பாசறையினருக்கு ஆண்டுக்கு இருமுறை பயிற்சிப் பட்டறை (திருப்பத்தூர், ஏலகிரியில் அத்தகு பயிற்சிப்பட்டறையும் நடத்தப்பட்டது) பெண்களுக்கான உடல்நலம், மனநலம் குறித்த ஆலோசனைகளுக்காக “பெரியார் குடும்பநல ஆலோசனை மய்யம்“ விரைவில் தொடங்கப்படும் (மேனாள் நீதிபதி வேணுகோபால் அவர்களின் தலைமையில் சிறப்பாக சென்னையில் நடைபெற்று, எண்ணிறந்த குடும்பங்களுக்கு பேருதவி செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தார் கழகத் தலைவர்)  என்றும் நமது பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை உடற்பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும் கூறினார்.

முத்தாய்ப்பாக ஒன்றை கழகத் தலைவர் சொன்னது ‘சலசலப்பை’ ஏற்படுத்தி விட்டது. அதனை ஆண்களுக்கு ஒரு பெரும் சவாலாகவும் கூடக் கருதலாம்.

ஆண்களைப் பார்த்து கழக மகளிர் அணியினர், பாசறையினர் இப்படிக் கூறலாம்.

“உங்களால் முடியாதது எங்களால் முடியும், எங்களால்தான் முடியும்!” என்று பெண்கள் சொல்லவும் வேண்டும், செயலிலும் காட்ட வேண்டும் என்று சொன்ன பொழுது பெண்கள் மத்தியிலிருந்து எழுந்த கரவொலி அடங்கிட வெகு நேரமாயிற்று.

-விடுதலை,29.5.17
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக